மரத்திலான வீடு ஒன்றில் ஒரு சிறுக்கி

நான் வாழ்வது மரத்திலான வீடு ஒன்றில். அதுவும் கீழ்மாடியில். மேல்மாடியில் வீட்டின் உரிமையாளர்கள் வாழ்கிறார்கள்.

முன்பொரு காலத்தில் எங்கள் வீடும் மரத்திலான இரு மாடிகளைக்கொண்ட வீடாக இருந்தது.

நான் இப்போது வாழும் வீட்டில் 3 சிறுக்கிகள் இருக்கிறார்கள்.  3, 5, 11 வயது அவர்களுக்கு. 3 வயதுக்காறிக்கு நடப்பது என்றால் என்ன என்றே தெரியாது போன்று எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருப்பாள்.

முன்பு எங்கள் வீட்டிலும் எனது இளையமகள் பூக்குட்டியும் நடப்பது என்பதை மறந்திருந்த காலமொன்று இருந்தது.

இன்று காலை  பலத்த தலைவலியுடன் எழும்பியபோது இன்றைய காலைப்பொழுது மிகவும் கனத்துடனுடம், சோர்வுடனும் விடிந்திருந்ததை உணர்ந்தேன்.

அந்தநேரம்பார்த்து மேல் வீட்டில்வாழும் சின்னஞ்சிறிய சிறுக்கி எனது  கட்டிலுக்கு நேரே மேலே அவர்களது வீட்டினுள் ஓடித்திரியும் சத்தம் தெளிவாகக்கேட்டது. தகப்பனும் அவள் பின்னால் ஓடித்திரிந்தார். பலத்த சிரிப்புச் சத்தமும் கேட்டது.

தடால் என்று ஒரு பெருஞ்சத்தம் கேட்டு அடுத்தநொடி அவள் வீரிட்டழும் சத்தமும் கேட்டது. தகப்பன் அவளை துக்கிஅணைத்திருக்கவேண்டும் அழுகைச் சத்தம் சற்றுநேரத்தில் அடங்கியும்விட்டது.

எனது நினைவுகள் விளித்துக்கொண்டு பெருவேகத்துடன் நர்த்தனமாடத்தொடங்கின. என் தலைவலி காணாதுபோயிற்று. காற்றில் மிதந்துகொண்டிருந்தேன். அவ்வப்பொது கண்கள்பனித்தன, நெஞ்சு விம்மிற்று.

பெண்குழந்தைகளுக்கு தந்தையாய் இருக்கக்கிடைக்கும் பாக்கியம் பெரும்பாக்கியம். அற்புதமான அனுபவம்.

எனது வாழ்வின் குழந்தைகளுடனான  காலங்களின்போது நான் வாழ்க்கையின் இனிமையினை திகட்டத் திகட்டத் தின்று தீர்த்த நாட்கள் அவை.

பெண்குழந்தைகளிடம் எப்போதும் அழகும், தந்தையுடனான அட்டகாசமும் தேவைக்கு அதிகமாய் இருக்கும். அவர்களின் அட்டகாசங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உங்களிடம் உள்ள குழந்தைத்தனத்தை நீங்கள் மீட்டுக்கொள்ளவேண்டும். முட்டாளாய் நடிக்கவும் அதை ரசிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

என்னைக் குழந்தையாயும், அவர்களைத் தந்தையாயும் நினைத்து மூத்தவளும் இளையவளும் காட்டிய கூத்துக்கள், யானையாய் அவர்கள் இருவரையும் தூக்கித் திரிந்தநாட்கள், உப்பு  மூட்டை விளையாட்டு, பொம்மைகனை நீராட்டி உடைமாற்றி, தள்ளுவண்டியில் தள்ளியபடியே சென்ற உலாக்கள், மிதி வண்டிப்பயணங்கள், காட்டுக்குள் இருந்த எங்கள் இரகசிய நீரோடை, என்காதில் குசுகுசுக்கப்பட்ட மந்திரச்சொற்களுக்கு ஏமாந்த சோணகிரியாய் நான் நடத்த நாட்கள், படுக்கையில் இருந்தபடியே என்னை அழைத்து கட்டியணைத்து ” நீ தான் உலகிலேயே சிறந்த அப்பா” என்னும் மந்திரச்சொற்கள், சுகயீனம் என்றால் என்நெஞ்சிலேயே உறங்கிப்போகும் அவர்கள். அவர்களின் சீரான மூச்சில் எனது என் மனம் முழுவதும் அமைதியை உணர்வது..

இப்படி எத்தனை எத்தனையே நினைவுகளை மீட்டுத் தந்தது மேல்வீட்டுச் சிறுக்கியின் காலடி ஓசை.

இன்றைய நாள் அழகாக ஆரம்பித்திருக்கிறது.

உங்களுக்கும் அழகாய் இருக்கக் கடவதாக.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்