பால்யத்துக் காதல்கள்

ஏறத்தாள 36 வருடங்களுக்கு முன் அம்மாவுக்கு மீண்டும் ஏறாவூர் வைத்தியசாலைக்கு மாற்றம் கிடைத்து. 8 வருடங்களின் பின் மீண்டும் ஏறாவூருக்கு குடிவந்திருதோம். நான் உனது பதின்மக்காலங்களின் ஆரம்பத்தில் இருந்தேன்.

ஊர் புதிது. நண்பர்கள் புதிது. புதிய புதிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய நண்பர்கள் மெது மெதுவாக அறிமுகமாகிய காலம். வயதுக்கு மீறிய சினேகம் பல விடயங்களைக் கற்றுத் தந்திருந்தது. 14 வயதுக்குரிய சேட்டைகள், திமிர் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.  ஊரே அழகாயிருக்க, எனது அப்பா மட்டுமே எனக்கு வில்லனாய் இருந்த காலம் அது.  கடைசிவரையில் நமக்குள் ஒத்துவரவே இல்லை.

எனது இரண்டாவது, மூன்றாவது எதிற்பாற்கவர்ச்சி  (பால்யக் காதலாயுமிருக்கலாம்) இந்த நாட்களிலே நடந்தது.

(முதலாவது எதிர்பாற்கவர்ச்சிக் கதையை வாசிக்க இங்கே செல்லவும் http://visaran.blogspot.no/2010/10/33.html)

பாடசாலை மட்டக்களப்பு நகரத்தில் இருந்தது.  ஏறாவூரில் பேரூந்ததுப் பயணம். நண்பர் கூட்டம், அதிலும் ஆர்ப்பாட்டமாய் குழப்படி, சேட்டைபண்ணும் நான், என்றிருந்த ஒரு காலத்தில் ஒரு நாள், பாடசாலை முடிந்து பேரூந்தில் திரும்பக்கொண்டிருக்கிறேன். முதுகின்பின்னால் யாரோ என்னை  ஊடுவிப்பார்ப்பது போன்ற பிரமை அறிந்து திரும்பிப் பார்க்கிறேன். இரண்டு கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் பார்ப்தைக் கண்டதும் தலையைக் குனிந்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

அது யாா் என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள்  பேரூந்துத் தரிப்பு நிலையத்தில் நின்று ஏறுபவள் என்பது புரிந்தது.அவளின் பாடசாலைச் சீருடையில் இருந்து அவள் எங்கு படிக்கிறாள் என்பதையும் அறிந்துகொண்டேன். அத்துடன் அவளை மறந்தும் போனேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது.

பேரூந்தில் பாடசாலைக்கு சென்றுவரத்தொடங்கிய காலங்களில்  மட்டக்களப்பு சென். சிசிலாயா கொன்வன்ட் பாடசாலை சீருடையில் அதிகமாய் எங்களது பேரூந்தில் ஒருத்தி பயணிப்பாள். அவள் அப்போது 8ம் வகுப்பு படித்தாள். நான் 10ம் வகுப்பு  அவளைக் கண்டால் இரத்தம் அதிகமாய் உடலுக்குள் பாய்ந்தது. உடம்பின் பாரம் குறைந்து, காற்றில் நடப்பதுபோன்று உணர்வு  ஏற்படும். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கும். அவளை பேரூந்தில் காணாவிட்டால் அடுத்த பேரூந்துக்காக காத்திருக்கத்தொடங்கினேன்.

அவள் பேருந்தால் இறங்கும் வரையில் அவளுடன் பயணித்து, அவளின் வீடு சித்தாண்டியில் இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். மறுநாள் அவளது தரிப்பிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவளுடன் ஒரே பேரூந்தில் பயணித்தேன்.

ஆனால் அவளுக்கோ நான் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்ற  சிந்னையே இல்லை. ஏறத்தாள 5 - 6 மாதங்கள் பித்துப்பிடித்து அலைந்தேன். அவள் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நேரத்திலதான் மற்றையவளின் பார்வைகள் என்னை ஏதோ செய்யத்தொடங்கின. முதல்  2 - 3 முறை நான் சிரத்தையே எடுக்கவில்லை.  அதன்பின் அவள் அடிக்கடி நினைவில் வந்தாள். கனவில் வந்தாள். பாடப்புத்தகத்தை திறந்தால் அதற்குள்ளும் நின்றாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்ளும்.  அவள் பார்க்காத நேரங்களில் அவளைப் பார்த்தேன். அவள் பார்க்கமாட்டாளா என்று மனம் ஏங்கும். அவள் அந் நாட்களில் என்னை பார்ப்பதை நிறுத்தியிருந்தாள்.

மனம் தவியாய் தவித்தது.  அவளுக்கு ஒரு கடிதம் கொடுப்பது என்று முடிவெடுத்தேன்.  கடிதம் எழுதியாகிவிட்டது. அக்காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கடிதஉறைகளின்  கரைகளில் சிவப்பு நீலம் நிறமாயிருக்கும். அவை அழகாய் இருக்கும் என்பதால் அப்படியான ஒரு கடித உறையை வாங்கிக்கொண்டேன்.  மெல்லியதொரு தாளில் கடித்தை எழுதி உள்ளே வைத்தேன். வாசமாய் இருக்கட்டுமே என்று சற்று   ”வாசனைப் பௌடர்”ஜ கடத உறையினுள் இட்டேன்.  அப்போதும்  மனம் திருப்தியுறவில்லை.  புத்தகக் கடையில் ஸ்டிக்கர்கள் இருந்தன.அவற்றில் இருந்த அழகியவற்றை தெரிவுசெய்து வாங்கி கடித உறைக்குள் இட்டேன்.

இனி கடிதத்தைக் கொடுக்கவேண்டும். அவளோ நண்பிகளுடன் வருபவள். பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்தேன். இறுதியில் ஒரு நாள் தனியே வந்தகொண்டிருந்தாள். சைக்கிலில்  ஏறி அவளைக் கடந்தவுடன்  அவளைநோக்கி சைக்கிலைத் திருப்பினேன். அவளையடைந்ததும் ”க்ம்ம்” என்று கனைத்தேன். அவள் திரும்பவே இல்லை. அவளைக் கடந்துசென்று தவறுதலாக கடிதத்தை தவறவிடுவதுபோன்று தவறவிட்டுவிட்டு வேகமாய் சென்று வேறு வீதியால் வந்தபோது கடிதம் அனாதையாய் வீதியில் கிடந்தது.

அதன் பின்ன்னா சில காலங்களில் அவளுக்கு கல்யாணமானது. அடுத்தடுத்து 2 - 3 குட்டிகள் போட்டாள். கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, வயிற்றில்  ஒன்று என்று அவள் நடந்த காலங்களும் இருந்தது. அந்நாட்களில் அவள் மீண்டும் என்னைக் கண்டால் புன்னகைப்பதுபோல் எனக்குத்தோன்றியது.

அனாலும் நான் புன்னகைத்ததில்லை.

அதற்கு காரணம்.
பேரூந்தில்  இன்னொருத்தி என்னைப் பார்த்து கண்ணால் பேசியதும்,  அவளுக்கு நான் கண்ணால் பதில் சொல்லத் தொடங்கயிருந்ததும்தான்.

2 comments:

  1. எதிர்பாராமல் வந்தாலும்
    எழுமாறாக எழுந்தாலும்
    உள்ளத்தில் முளைத்தாலும்
    பால்யத்துக் காதல்கள் என்றால்
    பட்டறிவைத் தந்திருக்குமே!

    ReplyDelete
  2. அந்த பேருந்தில் நான் பயணித்தேன் உங்களுடன் இன்று.. அழகான நடை..

    ReplyDelete

பின்னூட்டங்கள்