குறுகாக்கால போவார்

கடந்த  சனிக்கிழமை. அபகஸ் வகுப்பு இருக்கிறது. எனவே வகுப்பு நடைபெறும் இடத்திற்கு சற்று நேரத்துடனனேயே வந்து, அருகில் இருக்கும் தேனீக்கடையில் ஆப்பிள் கேக், லெமன் தேனீர் ஆகியவற்றுடன் ஒரு மூலையில் குந்தியிருந்து இன்று கற்பிக்கவேண்டிய விடயங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது தேனீர்க் கடைக்குள் இரு ஆபிரிக்க நாட்டவர்கள் வந்தனர். கடையை ஒரு நோட்டம் விட்டனர். நான் அவர்கள் தேனீர் அருந்த வந்திருக்கிறார்களாக்கும் என்று நினைத்தபடியே எனது புத்தகத்தில் கவனத்தை செலுத்தினேன்.

சற்று நேரத்தில் என்னைப் பார்த்து யாரோ ” அஸ்ஸலாமு அலைக்கும் ” என்பது கேட்டது.

நானும் ” அலைக்கும் அஸ்ஸலாம்” என்றேன்.

”கயை கனயமா யசக பலத மாற பரக்” என்று ஏதோ ஒரு மொழியில் உரையாடத்தொடங்கினார் ஒருவர்.

நிமிர்ந்து பார்த்தேன். என்னைவிட உயரமான, என்னிலும் மேலான கரிய நிறத்துடன், தடித்த உதட்டுடன் ஒருவர் நின்றிருந்தார். அருகில் இன்னொருவர். ஏறத்தாள முன்னையவரைப்போலவே இருந்தார். அவர் வாய் எதையோ சப்பிக்கொண்டிருந்தது.

"எனக்கு நீ பேசுவது புரியவில்லை நண்பா" என்று நோர்வேஜிய மொழியில் கூறினேன்.
” you my friend.. You not somali?" என்ற கேட்டு அலுத்த கேள்வியைக் கேட்டான்.
”No my friend.. I am from Sri Lanka" என்றேன்.

அவர்கள் ஒரு விலாசத்தை தேடி வந்திருந்தார்கள். அதனைக் கண்டுபிடிக்க உதவி கேட்டார்கள்.

அந்த விலாசம் அருகில் இருந்தாலும் ஒரு மோட்டார் வீதியை கடந்தே அங்கு செல்லவேண்டும். எனவே சற்றுத் தூரம் அவர்கள் நடக்கவேண்டி இருந்தது.
Google maps இல் இடத்தைக் காட்டினேன். ஆனால் படுபாவிகளுக்கு சற்றுத் தூரம் நடப்பது சிக்கலாக இருந்தனால் ஏன் மோட்டாரவீதியை குறுக்கே கடந்தால் என்ன என்றார்கள்.

முடியுமான அளவு பொறுமையாக விளங்கப்படுத்தினேன். எனது ஆங்கலம் அவர்களுக்கு புரியவில்லை. நோர்ஜேிய மொழியும் புரியவில்லை. எனக்கு சோமாலி மொழி தெரியாது.

நேரம் 10 - 15 - 20 நிமிடங்கள் என்று கடந்தபோது எனக்கும் காதுக்குள்ளால் புகை புறப்படத்தொடங்கியது.

இறுதியாக
”My friend.. please ask him” என்று கடைக்கார பையனைக் காட்டினேன்.

கடைக்கார பையனும் அதையே கூறினான். அவர்களுக்கு 15 நிமிடங்கள் நடப்பதற்கு விருப்பமில்லை. மோட்டார் வீதியை நேரே கடப்பதே நோக்கமாய் இருந்தது. கடைக்கார பையன் தலையை அங்கும் இங்கும் ஆட்டி அது ஆபத்தானது தவிர போலீஸ் பிடிக்கும் என்றான்.

இருவரும் தேனீர்கடையில் இருந்து வெளியே சென்றார்கள். நான் மீண்டும் புத்தகத்தில் முழ்கிப்போனேன்.

சற்று நேரத்தில் வீதிப் பக்கம் இருந்து பல வாகனங்கள் ஹார்ன் ஒலி எழுப்புவது கேட்க நான் எட்டிப்பார்த்தேன்.

எனது இருக்கையில் இருந்து பார்த்தால் மோட்டார் பெருஞ்சாலை தெரிகிறது.
மோட்டார் வீதியின் நடுவில் ஒருவர் நிற்கிறார். வாகனங்கள் சீறிப் பறக்கின்றன. சில ஹார்ன் ஒலி எழுப்புகின்றன. இன்னும் சில சாரதிகள் ”நடுவிரலை” சந்தோசமாக காட்டிவிட்டு செல்கிறார்கள்.

ஒருவிதமாக ஒருவர் வீதியின் நடுவில் அமைந்திருக்கும் சீமெந்துக் கட்டில் ஏறிவிடுகிறார். மற்றையவர் இப்போதும் இக்கரையில் வாகனங்களை சற்று ”நிறுத்துங்கய்யா நான் வீதியை கடக்கவேண்டும்” என்ற தொனியில் கையை காட்டுகிறார். எவரும் நிறுத்துவதாயில்லை. மற்றையவர் இவரை வா வா என்று சைகையில் காட்டுகிறார்.

இப்படியே சில நிமிடங்கள் கடக்கின்றன.

இப்போது நடுவில் நின்றவர் மறுகரைக்கு சென்றுவிட்டார். இக்கரையில் நின்றவர் வீதியின் நடுவில் நிற்கிறார்.

அந்தநேரம் பார்த்து சைரன் சத்தம் கேட்கிறது. நடுவில் இருந்தவர் நாலுகால் பாய்ச்சலில் வீதியை கடக்கவும், அவரருகில் போலீஸ் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

3 comments:

  1. பாவம் அந்த மணிதர்கள். வீதி ஒழுங்கு தெரியாது போல !

    ReplyDelete
  2. குறுக்கால போவான் என்று நம்மூரில் பாட்டிமார் திட்டும் அன்பும் தனிச்சுகம் தான்.

    ReplyDelete
  3. மொழிச் சிக்கலுடன்
    மனித அடையாளங்கள்
    சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்