அப்பா உனக்கு பைத்தியம்

2002ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.எனது இளையமகளுக்கு ஒன்றரை இரண்டு வயதிருக்கும்.

அந்நாட்களில் அவள் எதை, எப்போ, எப்படி, எதற்காக செய்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை கச்சிதமாக முடித்துவிடுவாள்.

வேலையை முடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பாள். அந்தச் சிரிப்பில் எனது கோபம் கரைந்துபோகும்.

ஒரு நாள் காலை ஆசை ஆசையாய் ஒரு புதிய மடிக்கணிணி வாங்கி வந்திருந்தேன். முத்தமகள் பெட்டியை திறந்து கணணியை எடுக்க உதவினாள். இளையவள் பெருவிரலைச் சூப்பியபடியே தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள். 

நிலத்தில் உட்கார்ந்திருந்தபடியே கணிணியை வெளியே எடுத்து, அதைச்சுற்றி இருந்த பொலித்தீன் பையை அகற்றி கணிணியை இயக்கினேன். கணிணி கிர்ர்ர் என்று உயிர்த்தது.

அருகில் இருந்த தேனீர் கோப்பையை எடுத்து வாயில்வைத்து ஒரு செக்கன் கண்ணை மூடி உறுஞ்சுகிறேன்.

அப்பா... பூக்குட்டீடீ என்று முத்தவள் கத்தும் சத்தம் கேட்கவும், கணிணியின் மீது இளையவள் தனது இனிப்புப் பானத்தை கவிட்டு ஊற்றவும் சரியாக இருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கணிணியை எடுத்து தலைகீழாகப் பிடித்தேன். கணிணி ப்ஸ்ஸ் என்ற ஒலியுடன் தனது மூச்சை நிறுத்தியது. கணிணியில் இருந்து மஞ்சல் நிற இனிப்புப்பானம் வழிந்துகொண்டிருந்தது.

இளையவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

இனிப்புப் பானமாகையால் பிசு பிசுப்பாய் இருக்கும், ஒட்டுப்படும் என்பதால் நன்றாக நீரில் பிடித்து 2 -3 நாட்கள் காயவை என்றார் எனது நேர்வேஜிய நண்பர் ஒருவர். அப்படியே செய்தேன். 3 வது நாள் யேசுநாதர் உயிர்த்துது போன்று என் கணிணியும் உயிர்க்கும் என்று நினைத்தபடியே கணிணியை இயக்கினேன்.

கணிணி தான் யேசுநாதர் அல்ல என்பதை நிரூபித்தது.

நான் கவலையில் படுத்திருந்தேன். ஆனால் பூக்குட்டி அதைப்பற்றி மட்டுமல்ல எதைப்பற்றியும் கவலை இன்றி என் மீது ஏறியிருந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

இதே போன்று இன்னொரு கதையும் இருக்கிறது.

அந் நாட்களில் எனக்கு தூக்கம் வரும்நேரங்களில் அவளுக்கு விளையாடும் ஆசை வரும். எனக்கு விளையாட ஆசை வரும் நேரங்களில் அவளுக்கு தூக்கம் வரும்.

ஒரு விடுமுறை நாள், காலை 6 மணியிருக்கும். என்னை விளையாட அழைத்தாள். அப்பா சற்று தூங்கிவிட்டு வருகிறேன் என்றுவிட்டு சற்று அயர்ந்தபோது அவள் கட்டிலால் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அப்பா.. அப்பா.. என்று அவள் அழைக்கும் சத்தம்கேட்டது. கண்விளித்துப்பார்த்தேன்.

அவள் எனது கண்ணாடியை முறித்து இரண்டு கைகளிலும் கண்ணாடியின் அரை அரைப் பகுதிகளை வைத்திருந்தாள்.

அப்போதும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

13 வருடங்களின் பின்னான இன்று காலை தவறுதலாக எனது கண்ணாடியின் மீது உட்கார்ந்து கொண்டதால் எனது கண்ணாடி உடைந்துபோயிற்று.

இன்று பூக்குட்டி இருந்திருந்தால் ”அப்பா உனக்கு பைத்தியம்” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.

2 comments:

  1. குழந்தைகள் தேவதூதர்கள் போல அருமையான கதைப்போக்கு! வாழ்த்துக்கள் வலையில் 9 ஆண்டினை பூர்த்தி செய்தற்கு அண்ணாச்சி!

    ReplyDelete
  2. குழந்தைகள் உடனான உறவு கலந்த
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்