இத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீரும்

இன்று மதியம் பிராங்கோ என்னைக் கண்டதும் "அமீகோ எப்போ வந்தாய்" என்றபடியே "வா கோப்பி குடிப்போம்" என்றான்.

இத்தாலியர்களின் கோப்பியில் எனக்கு காதல் இல்லை என்றாலும் நட்புக்காக "வா போவோம்" என்றேன்.

தனது அறைக்கு அழைத்துப்போனான். குண்டுவெடிப்பின் அதிர்வில் உடைந்திருந்த கண்ணாடியை போலித்தீனால் மறைத்திருந்ததை அவதானித்தேன். எனது பார்வையைக் சென்ற இடத்தைக் கண்டதும் "நீ இல்லாதபோது நடந்தது என்றான்".

அண்மையில் இத்தாலிக்குச் சென்றுவந்தபோது புதுவிதமானதோர் கோப்பித் தயாரிப்பு இயந்திரத்துடன் வந்திருந்தான். அதை எடுத்து அதன் கீழ்ப்பகுதியினுள் தண்ணீரை நிரப்பினான். அதற்கு மேல் மிக நுண்ணிய ஓட்டைகளைக்கொண்ட 2 செமீ உயரமான, 5 செ.மீ விட்டத்தையுடைய ஒரு வட்டமான கொள்கலளினுள் கோப்பித்தூளை இட்டு தண்ணீருக்கு மேலே வைத்தான். அதற்கு மேலே கோப்பியை சேகரிக்கும் பகுதியை வைத்தபோது அதனுள் கோபுரம்போன்றதொரு வடிவமைப்பு இருந்தது. அந்தக் கோபுரத்தின் உச்சியில் ஓட்டையொன்றும் இருந்தது. வாயு அடுப்பை பற்றவைத்தான். நீலநிறக்கதிர்கள் எரியத்தொடங்கின.

நீர் கொதித்து, நீராவி கோப்பித்தூளை ஊடறுத்து, நீராவியில் கலந்தகோப்பியை கோபுரத்தின் உச்சியில் இருந்த ஓட்டையின் ஊடாக கொள்கலனுக்குள் நிரப்பியது.

இத்தனையும் நடந்து முடிய ஏறத்தாள 15 - 20 நிமிடங்கள் சென்றிருக்கும். ஏதோ கடலுக்கு கீழ் இருந்து எண்ணை எடுப்பதுபோன்ற அவதானத்துடன் அவன் கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தான்.

எனக்கு நேரம் செல்லச் செல்ல காதால் புகைவரத்தொடங்கியது. "கெதியில் கோப்பியைத் தா. இன்றைய மாலை உணவுக்கு ரொட்டி, பால், பேரீச்சம்பழம் வாங்கச் செல்ல செல்வது எனது முறை. நீண்ட தூரம் நடக்கவேண்டும் " என்றேன் சற்று எரிச்சலான குரலில்.

கோப்பியை ஒரு சிறு குப்பிபோன்ற ஒரு குவளையில் ஊற்றினான். அதை ஒரு மிடக்கில் குடித்துவிடலாம். அத்தனை சிறியளவு கோப்பி.

கோப்பியை வாயில் வைத்தேன். இதைவிட வேப்பம்பழம் உண்ணலாம்போன்றிருந்தது.

பல்லைக்கடித்தபடியே விழுங்கினேன்.

எப்படி இருக்கிறது மொக்கா கோப்பி என்றவனிடம் "போடா மொக்கா, நீயும் உன் மொக்கா கோப்பியும்" என்று சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு எங்கள் ஊரில் இழுத்த தேனீர் என்று ஒரு பானம் உண்டு. நாளை எனது அறைக்கு வா. இழுத்த தேனீர் தருகிறேன் என்றுவிட்டுப் புறப்பட்டேன்.

இரவு ரொட்டியும் பாலும் பேரீச்சம்பழமும் உண்ணும்போது உனது இழுத்த தேனீரைப் பருகுவதற்கு ஆவலாய் இருக்கிறேன் என்றான். மற்றையவர்கள் என்ன வென்றார்கள். அவர்களுக்கு கண்ணடித்து விடயத்தை விளக்கினேன்.

மறுநாள் காலை 10 மணிக்கு எனது அறைக்கு வெளியே ஐவர் நின்றிருந்தார்கள். பிராங்கோ ”இழுக்கும் தேனீர் போடு” என்றபடியே படியில் குந்திக்கொண்டான்.

நானும் சுடுநீரில் தேயிலையை இட்டு, சாயம் வடித்தபின் இப்படித்தான் தேனீரை இழுப்பது என்றேன். அனைவரும் என்னைப் பார்த்தார்கள்.

ஒரு கோப்பையில் இருந்த தேனீரை இன்னொரு கோப்பைக்கு உயரத்தில் இருந்து ஊற்றினேன். அதை மீண்டும் மற்றைய கோப்பைக்கு ஊற்றினேன்.

பிராங்கோ இதுதான் இழுத்து இழுத்து போடும் தேனீர் என்று அவனை பரிசகித்தார்கள், நண்பர்கள். நான் குறும்புத்தனமாய் சிரித்தேன்.

பிராங்கோவின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்