நேற்றுமுன்தினம் மாலை 10 மணியிருக்கும். நோர்வே நண்பருடன் முகப்பத்தக உரையாடலின் ஊடாக உரையாடிக்கொண்டிந்தேன்.
திடீர் என பக்கத்துவீட்டில் இருந்து தானியங்கித் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. எமது கட்டட அபாயச்சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.
பாய்ந்தோடி நிலக்கீழ் பதுங்கு குழிக்குள் புகுந்தேன். திடீர் என மின்சார நிறுத்தப்பட்டு பதுங்குகுழி இருட்டானது. ஒரு குண்டுவெடித்தது. எமது கட்டடம் அதிர்ந்து ஓய்ந்தது.
அந்த இருட்டில் எனது முதுகினை யாரோ சுரண்டினார்கள். திருப்பினேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒரு கை என்கையைப்பிடித்து மறுகையால் ஒரு நீரருந்தும் ஒரு கிண்ணத்தை எனது கையில் திணித்தது. வாங்கி மணந்து பார்த்தேன். ராகி என்னும் மதுபானவகை.
யாரடா இத்தனை ரணகளத்திலும் பாயாசம் அருந்துவது என்று நினைத்தபோது மின்விளக்குகள் எரிந்தன.
பின்னால் எனது துருக்கிய தோழன் அர்கான் சிரித்துக்கொண்டே “மகிழ்ச்சியான மாலையாக அமையட்டும்” என்று தனது கிண்ணத்தை தலைக்கு தூக்கிக்காண்பித்தான்.
அவனுடன் வெளியில் வந்தேன். பாலஸ்தீனத்து நகரகாவலர்களும், இராணுவமும் அங்கு நின்றிருக்க அவரது வாகனங்கள் சிவப்பு நீல வெள்ளை நிற அபாய விளக்குகள் ஒளிர நின்றிருந்தன. வீதி முழுவதும் சனத்திரள். கூச்சல் அடங்கியபின் என்ன விடயம் என்றேன் அருகில் நின்றிருந்த பாலஸ்தீனத்து நகரகாவலரிடம்.
இரண்டு குடும்பங்களுக்கிடையில் காதற்பிரச்சனை, இருவர் துப்பாக்கிக்காயங்களுடன் வைத்தியசாலையில். குண்டு வெடித்து ஒரு வாகனம் சேதம் இது பெரிய பிரச்சனை இல்லை, நீங்கள் அச்சப்படத்தேவையில்லை என்றார்.
எனனது? துப்பாக்கி சரமாரியாக வெடிக்கிறது, ஒரு குண்டும்வெடிக்கிறது, இருவர் வைத்தியசாலையில், ஒரு வாகனம் சேதப்பட்டிருக்கிறது இது சின்னப்பிரச்சனையா என்று கேட்பதற்கு அருகில் நின்றிருந்து துருக்கிய அர்கானைத் தேடினேன். இன்னொருவருக்கு “மகிழ்ச்சியான மாலையாக அமையட்டும்” கையிலிருந்த கிண்ணத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தான்.
அடேய், ஒரு காதலுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா.அது அநியாயமில்லையா?
என்ட Oslo முருகா, இந்த ஊரில் இந்தப் பாவியை காதற்வயப்படவைத்துவிடாதே.
ஒரு சீனவெடிக்கே பயந்தவன் நான்.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்