சித்தாண்டி-அப்பு














அப்பாவின் நெருங்கிய நண்பர், கந்தப்போடியார். அவருக்கு நாங்கள் வெத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்).

உருண்டு திரண்ட தேகம், மங:கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய மறைக்காத மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவவப்போது சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிஞ்சு வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.

ஆவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக் காம்பை மட்டும் தருவார்.

எக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம் அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்ட போனால் சாப்பிட்டு முடியாது. அவ்வளவு அன்புத் தொல்லை.

அப்பாவும், அவரும் கதிர்காமம் நடந்து போன ஞாபகம் உண்டு. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை கலைத்தாராம் என்று சொன்னார். பயங்கரமான முருகபக்த்தர்..

2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டிஅப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்றார்.

தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி.

நான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவத்தினால் செத்த வீட்டுக்கு போகவில்லையாம். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

நான் வெளிக்கிட்ட போது வெத்திலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தார் போல), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்……

கிட்டக்கூப்பிட்டு தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா என்றார்.

அடுத்த முறையும் போய் பார்க்க வேண்டும்.

....................................
* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா? மட்டக்களப்புத்தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.
என்னென்று அதை எழுத்தில் கூறுவது என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: என்னடா தம்பியை …. என்ன்றாரம்ம்பி என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)

.சித்தாண்டித்தமிழில் ”பு” என்ற தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படிக் கதைப்பதில்லை.

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்