சர்வதேச பெண்கள் தினத்தில் எனக்கு வந்த சோதனை

அய்யா, அம்மா நான் ஏதும் பெண்களுக்கு எதிராக கதைக்கிறேன் என்று நினைத்து என்னைக் கொல்லும் நோக்கத்துடன் நீங்கள் வந்திருந்தால் .. கூல் ..கூல்.
வன்முறைக் கலாச்சாரத்தை கைவிடுங்கள்... பேச்சாயுதம் பூண்ட தமிழர்களல்லவா நாம. 

தலையங்கம் தான் சுடாயிருக்குதே தவிர வேறொறு மசிரும் இந்தப் பதிவுக்குள் இல்லை. ஆனால் நான் எழுதப்போவதெல்லாம் உண்மை. ஓஸ்லோ முருகன் சத்தியமா உண்மை. ஒஸ்லோ அம்மன் சத்தியமாக உண்மை.

இன்று காலை எழும்பி குளித்துவிட்டு காதைத்துடைத்துக் கொண்டிருக்கும் போது தான் கவனித்தேன் காதுக்குள் இருந்து, சூரிய ஒளியை நோக்கி நீண்டு வளரும் இலைகள் போன்று, பல மயிர்கள் நீண்டு வளர்ந்திருப்பது தெரிந்தது. தவிர எனது தலையில் இருக்கும் ஒரு லட்சத்து எழுபத்திநாலாயிரத்து நானூற்று முப்பத்தி நான்கு மயிர்களும் தேவைக்கு அதிகமாக வளர்ந்திருந்தன. அதாவது 5 மில்லிமீற்றர்  நீளமாக வளர்ந்திருந்தன. இதன் காரணமாக நரை மயிர்கள்  எனது  யௌவனத்தின் ஒளியை சூரியனின் ஒளியை மறைக்கும் முகிற்கூட்டம் போன்று மறைத்துக்கொண்டிருந்தது.

அப்போதே இதற்கு ஒரு முடிவு கட்டுவதாக முடிவெடுத்துக்கொண்டேன்.  மாலை எனது ஆஸ்தான முடிவெட்டும் பாலஸ்தீன நண்பரிடம் போன போது அவர் கடையைப் பூட்டிவிட்டு எங்கோ போயிருந்தார்.  மனதுக்குள் அவரைத் திட்டியபடி மீண்டும் திரும்பி வந்துகொண்டிருந்த போது ஒரு ஜனநடமாட்டமில்லாத இடமொன்றில் ஒரு சலூன் இருந்தது. அதில் கடை உரிமையாளர் அல்ஜசீரா டீவி யில் கேர்னல் கடாபியின் தலையெழுத்தை பார்த்துக் கொண்ருந்த போது தான் நான் அக்கடையினுள் புகுந்தேன்.

என் தலைமயிரை என் தொப்பி மறைத்துக்கொண்டிருந்தது. தலைமயிர் வெட்டலாமா என்றேன். நிமிர்ந்து பார்த்தார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை உட்காருங்கள் என்றார். நானும் ஜக்கட்ஜ முதலில் களட்டி வைத்து, கதிரையில் குந்திய பின்பே தொப்பியைக் களட்டினேன். எனது தலையை ஒரு விதப் புன்னகையுடன் பார்த்தார்.  இரண்டு நிமிடத்தில் வேலை முடியும் என்னும் போது அந்தக் குரலில் அவரின் குதூகலம் புரிந்தது.

நானும் இப்படித் தான் வெட்டவேண்டும் என்று ஆணையிட்டப‌டியே அவர், என்னைச்சு சுற்றிக் கட்டிய கறுப்பு நிற போர்வையை ஏற்றுக்கொண்டேன். முதலில் காதோரமாக இலக்கம் 0 கட்டிங், பின்பு அதற்கு மேல் 1, அதன்பின் மயிர் இல்லையாதலால் நீ வெட்டத் வெட்டத்தேவையில்லை, காதுக்குள் இருக்கும் களைகளையும் அகற்றவேண்டும், அதே மாதிரி மூக்கு மயிரும் சிரைக்கப்படவேண்டும் என கட்டளையதிகாரியின் பாணியில் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் அவர் என்னை இடைமறித்தார்.

அய்யா! உங்கள் காது மயிரை நான் கத்தியால் மளித்துவிடவா, அல்லது நூலால் அகற்றவா என்றபோது என்னடா இவன் புதினமாக நூல் என்கிறானே.. நமக்கு காதும் சற்று கேட்பதில்லையாதலால் நான் தான் ஏதும் பிழையாக விளங்கி விட்டேனோ என்று நினைத்து என்ன நூலால் அகற்றுவதா என்றேன். ஆம் அய்யா இது ஒரு புது டெக்நீக். இதன் மூலமாக அகற்றினால் காது மயிர் அடுத்த முறை முளைத்த வர ரொம்ப காலமெடுக்கும் என்றார்.

எனக்கு, இந்த காது மயிர் எனது யௌவனத்தை அழகைக் கெடுப்பது விருப்பமில்லையாதலால் சரி உன் நூல் தொழில்நுட்பத்தை காட்டு என்றேன்.

முதலில் ஒரு லட்சத்து எழுபத்திநாலாயிரத்து நானூற்று முப்பத்தி மூன்று மயிர்களுக்கும் ஒரு மெசினைப் பிடித்தார். அந்த வேலை ஏறத்தாள 40 செக்கன்கள் பிடித்திருக்கும். தற்போது எனது தலையில் இருந்த எண்பத்திஏழாயிரத்து இருநூற்றிப்பதினேழு (50%) நரை மயிர்களும் இன்றி நான் மிகவும் அழகான வாலிபனாக இருந்தேன்.

இப்படி நான் எனது அழகை மெய் மறந்து ரசித்துக்கொண்டிருந்த போது அவர் கையில் நூலை எடுத்ததையோ அதன் ஒரு நுனியை வாயிலும் மறு நுனியை கையிலும் பிடித்தபடியே எனது காதுக்கு மிக அருகில்.. ஆம் மிக மிக அருகில் வந்ததையோ கவனிக்கவில்லை நான். திடீர் என்று அவர் என்னை முத்தமிடுவது போல் வாயை பிடித்துக்கொண்டு என்னை நெருங்கி வருவது கடைக்கண்ணுக்கு தெரிந்த போது நான் திடுக்கி்ட்டு உட்கார்ந்தேன். அருகில் வந்தவர் சற்று பின்வாங்கி ஒரு கையால் ‌தலையைத் சரித்து காது அவருக்கு தெரியுமாறு வசதியாக வைத்துக்கொண்டார்.

பின்பு அவர் அந்த நூலை அங்கும் இங்கும் ஆட்டி எனது காது மயிர்களை பிடுங்கத் தொடங்கிய போது தான் எனக்கு விடயம் புரியத் தொடங்கியது. அப்போ வெள்ளம் தலைக்கு மேல் போயிருந்தது.

நானும் இப்படி வாயில் நூல் வைத்து ஆட்டி ஆட்டி ஏதோ செய்வதை கடைகளின் கண்ணாடிகளுக்கூடாக கண்டிருந்தாலும்  அதை என்னுடலில் அனுபவிப்பது அதுவே முதல் முறை. நான் ஆவ், ஆ, ஊ, ஊ என்று கத்துவதைக் கூட மனிதர் கவனிக்காமல் சுற்றாடலை மறந்து தனது குறியிலேயே கவனமாயிருக்கும் வேட்டைக்காரனைப் போல் தன் தொழிலிலேயே கவனமாய் இருந்தார். எனக்கு உயிர் போய்க்கொண்டிருந்தது. சற்று நேரத்தில் மற்றைய காதைக்கு மாறி அங்கும் தனது தொழிற்திறமையை அவர் காட்டி ஓயந்த போது சத்தியமாக என் கண்ணீல் கண்ணீர் திரண்டிருந்தது. (அது ஆனந்தக் கண்ணீரா என்று நீங்கள் கேக்கப்படாது .. ஆமா!)

அவரின் நூல் டெக்நீக் எனது காதில் ஆடிய ஆட்டத்தால் நான் ஆட்டம் கண்டிருந்தேன். நான் சகஜ நிலைக்கு திரும்ப எனக்கு சில நிமிடங்கள் பிடித்தது. அதன் ‌பின் நான் எழுந்து மெதுவாய் காதை தடிவியபடியே அவரைப் பார்த்தேன். அங்கு ஒரு மயிரும் இல்லை என்றார். டேய், நீ எனது காதையாவது விட்டு வைத்தாயே என்று நான் எனக்குள் நினைத்துக் கொண்டு அவருக்கான பணத்தைச் செலுத்தி வெளியில் வந்தேன். குளிர் காற்று மயிரில்லாத எனது தலையைத் தடவிப் போன போது  மனம் இப்படி சிந்தித்தது..

அய்யோ....  என்ட ஓஸ்லோ முருகா....  என்னால இந்த காது மயிர் புடுங்கினதயே தாங்ககேலாம இருக்கு.. இந்தப் பெண்கள் எப்படி கால்மயிர், கைமயிர், முகத்தில், மென் மீசை, கண் இமை ... என்று புடுங்கித் தள்ளுகிறாகள்?

மயிர் புடுங்க இவ்வளவு கஸ்டப்படும் அவர்களுக்கு சர்வதேச பெண்கள் தினம் என்று ஓரே ஒரு நாளை மட்டும் ஓதுக்கிக் கொடுப்பது மிகவும் கொடுமைய இருக்கிறது எனக்கு. எனவே முழுவருடத்தையும் சர்வதேச பெண்கள் தினங்களாக அறிவிக்கவேண்டும் என்று முன்மொழிகிறேன்.


ஒப்பனை நிலையங்களில் வீரம் செறிந்து, பல்லைக் கடித்தபடி   தங்களை அழகாக்கிக் கொள்ளும் எங்கள் தாய்க்குலத்து கண்மணிகளுக்கு, ஒரு நாள் மயிர் புடுங்கலிலேயே புறமுதுகிட்டோடும் இந்த விசரனின் வாழ்த்துக்கள். 

இந்தப் பதிவு உங்களின் வீரத்துக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

மக்கா ...  இனிமேல் பாராவது நூலால் மயிர் புடுங்க வந்தீங்க.....  சாமி சத்தியமா கொன்ன்ன்னுபுடுவன் .. கொன்னு.



இன்றைய நாளும் நல்லதே.


.

10 comments:

  1. ஆஹா, நல்லா மாட்டினீங்க !!!

    ReplyDelete
  2. அருமையான, அழகான, சுவாரஷ்யமான பதிவு :)

    ReplyDelete
  3. ஆமாம் .....இது threadning என்பார்கள். நமக்கு இந்தத் வித்தை எல்லாம ஆகாதுப்பா .
    சில இடங்களில் கண் கலங்கும் கன்னியரைக் யாரைக் கண்டு இருக்கிறேன். காலத்தின் கோலம் . ஊரோடு ஒத்த வேஷம்.

    ReplyDelete
  4. வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டும் நீங்கள்
    காதைக் கொடுத்துக் கத்தி அழுததைக் கேட்ட முடியவில்லையே.
    சுவையாக இருந்தது.

    ReplyDelete
  5. ஹாஹா த்ரெட்டிங் செய்தீர்களா? ஒருமுறை நண்பனின் திருமணத்துக்காக அவனுடன் நானும் சேர்ந்து உந்தக்கோதாரியை தாடி வழிக்க அனுமதித்து அழுத கதை பெரும்கதை..

    ReplyDelete
  6. STORY INTERESTING BUT TITLE IS NOT.BEST WISHES

    ReplyDelete
  7. பாஸ்கரன்March 10, 2011 11:00 am

    நண்றி நண்பரே,காக்ஷியமா எழுத்து
    தாமாகவே துன்பத்தை வாங்கிக்கொள்ளும் பெண்களுக்கு மகளிர் தினம் தேவைதானா என்ன???? ஏதோ ஆணாதிக்க சமூகம் என்று சொல்லிக்கொண்டு அவர்களே தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்

    ReplyDelete
  8. KAATHUM NOOLUM MAYIRUM PADDA PAADU... TOPIC SHD BE MORE APPROPRIATE..!!! WRITE MORE!

    ReplyDelete
  9. Azsar SinnalebbeMarch 16, 2011 4:03 pm

    THERIYAMA,THERINDA MATHI NATITHATATKU NALLA PARISU,.....ITHUKUM VENUM INNAMUM VENUM

    ReplyDelete
  10. வாசுகிMarch 19, 2012 9:51 pm

    இலகுவாக, நகைச்சுவையாக இப்படியும் எழுதலாம். சிரிக்க வைப்பது ஒரு கொடை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்