தற்கொலைக்கு உதவிய நான்

 ”எதிர்” (http://ethir.org) இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எனது ஆக்கம்.

ரோப்பிய நகரமொன்றின் பிரபல நிலக்கீழ் சுரங்க ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள சொப்பிங் சென்டரால் ஏதோ நினைத்தபடி வெளியேறிக் கொண்டிருந்தேன். வெளியே குளிர் குளிர்ந்து கொண்டிருந்தது.
வாசலால் வெளியேறிய என்னைப் பார்த்த ஒருவர் ”அலைக்கும் அஸ்லாம், அலைக்கும் அஸ்லாம்” என்றபடி ஓடி வந்தார். தெரிந்தவராயிருக்குமோ அல்லது கடன் தந்த அப்பாவியோ என்று பலமாய் சிந்தனையோட அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தேன்.

அருகில் வந்தார். ”யூ ஆர் ப்ரொம் பாக்கிஸ்தான் ?”  என்றார். ஏன் என்னை மட்டும் இவர்களுக்கு சோமாலியனாகவும், எரித்திரியனாகவும், இப்ப பாகிஸ்தானியாகவும் தெரிகிறது. வந்த எரிச்சலை அடக்கிக் கொண்டு மெளனமாய் நின்றிருந்தேன்.
”ஸ்பீக் இங்கிலீஸ்”
ஆம் /இல்லை என்பது போல் என் தலை சற்று மேலும் கீழுமாய் ஆட, சுற்றாடலைக் கவனித்தேன். இந் நாட்களில் இந்த நகரத்தில் ஒருவர் கதைகொடுக்க மற்றவர்கள் சேர்ந்து வந்து கொள்ளையடிப்பதாக கதை உலாவுகிறது என்பதனால்.

நம்மிடம் என்ன இருக்கு கொள்ளையடிக்க என்று நினைத்துப் பார்த்தேன். பையினுள் தண்ணீர் போத்தலும், ஒரு புத்தகமும் மட்டுமே இருந்தது. காசும் கையில் இருக்கவில்லை. நானும் செக்சியாய் இல்லை. எனவே பாதகமில்லை என்பதால் தைரியம் வந்தது.

இப்பொழுது  அவர், பக்கத்து வீட்டு முருங்கை எங்கள் வீட்டுக்குள் சாய்ந்திருந்தால் அது எங்களுடையது என்பது போல சிவனே என்று தொங்கிக் கொண்டிருந்த எனது கையை எனது அனுமதி இன்றி  இழுத்துக் குலுக்கிக் கொண்டிருந்தார். நானும் சுற்றாடல் பாதுகாப்பாய் இருந்ததனால் வலுக்கட்டாயமாக சிரிப்பை அழைத்து வந்து முகத்தில் இருத்தி சிரித்தேன்.

”ஐ நீட் புவர் போன்” என்றார்”
”தர ஏலாது அது என்னுடையது” என்று சொல்ல யோசித்தேன்.. அதற்கு முதல் அவரே இப்படிச் சொன்னார்.

ஐ மரி டுமோரோ
எனது மனமோ… அட பாவமே… தற்கொலை செய்யப்போகிறேன் என்று இவ்வளவு ஆறுதலாக சொல்கிறானே என்று அவனில் அனுதாபப்பட தொடங்கியிருக்க… என்னை அருகில் இருந்த பூக்கடைக்கு அழைத்துப் போய் ஒரு பூங்கொத்தை காட்டி.
”டூ மை லேடி” என்றான் நீங்க ரொம்ப அப்பாவிண்ணே என்று வடிவேலு குரலில் சொல்ல வேண்டும் போலிருந்தது எனக்கு
”ப்ரெண்ட்…. ஐ நீட் கோல் மை லேடிஇ அன்ட் ஆஸ்க் திஸ் கலர் ஓகேஇ பட் ஐ நோ போன்” என்றதும் .. ஒன்றையும் ஒன்றையும் கூட்டிப் பார்த்தேன். . இப்படி விளங்கியது.

அவர் எதிர்கால மனைவியிடம் பூங்கொத்தின் நிறம் பற்றி உரையாட விரும்புகிறார் ஆனால் அவரிடம் தொலைபேசி இல்லை என்பதால் என்னிடம் கேட்கிறார்.

தற்கொலைக்கு தயாராகவிருக்கிறான்  அவன். என்னாலான சிறு உதவியை செய்யாவிட்டால் நானும் மனிசனா என்று நாளைக்கு எனது மனம் என்னைக் கேள்விகேட்கக் கூடாதென்பதற்காக  இந்தா  வேண்டுமான அளவு கதைத்துக்கொள். இது தான் நீ உனது வாழ்வில் கடைசியாக சுதந்திரமாக உலாவும் நாள் என்று நினைத்தபடியே போனை நீட்டீனேன்.

படுபாவி....... போனில் கொஞ்சுகிறான்… கெஞ்சுகிறான், கெஞ்சுகிறான்.. அவள் மிஞ்சுிகறாள்.. இவன் அஞ்சுகிறான்…  ஆண்வர்க்கத்தையே அடகுவைத்துவிட்டான் பாவி .. அந்த 5 நிமிடத்துக்குள்.

ஒரு பைத்தியத்தைப்போல் 15 நிமிடங்கள் போல் அவ்விடத்தில் காவலிருந்தேன். டெலிபோனை எடுத்துக் கொண்டு ஓடிவிடுவானோ என்பதால் கடையின் வாசலி்ல் நின்று கொண்டேன். அப்படி அவன் ஓடினால் கால் தடம் போட்டு விழுத்துவதாகவும் புலனாய்வுத்துறை சொல்லியது எனக்கு.

பூக்கடைக்காறி..  இவனின் அவசரம் புரிந்ததால் வாடிய பூவையும் அவனின் பூங்கொத்துக்குள் சொருகியபடியே இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள்.  இவன் தனது தன்மானம் எல்லாவற்றையும் இழந்து தொ‌லைபேசிக் கட்டளைகள் எல்லாவற்றிற்கும் தலையாட்டிக்கொண்டிருந்தான்… அவனைப் பார்த்தால் வேள்விக்கு போகும்   (ஸ்..ஸ்  சத்தம் போடாதீங்க) போலிருந்தது.

வாடிய,வாடாத பூக்களுடன் நாளைய மனைவியின் பூங்கொத்து ரெடியாகியது.  அடுத்தது தற்கொலையங்கிக்கான ரோஜாப்பூவின் நிறம் பற்றி கதைக்க ஆரம்பித்தான். அது மஞ்சள் நிறம் என கட்டளையதிகாரி  கூற, வாயால் வந்த லிங்கத்தை பெற்ற பக்தன் போல அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். எனக்கு அந்த நிறம் கண்றாவியாய் இருந்தது.

மீண்டும் ஏதோ  புரிதாத பாசையில் சொல்லி பலமாய் சிரித்தான். ஒரு வேளை… அழகிய ராட்சசியே..!  எனக்கு ஒரு ‌ கறுப்புச் சனியன் ஓசியில போன தந்திட்டு கேனயன்  கணக்கா நிற்கிறான் என்று சொன்னானோ.. என்னவோ. அல்லது புதுப் பெண்டாட்டியை மயக்கும் கதை ஏதும் சொன்னானோ என்னவோ.. வெடித்து சிரித்து… முத்தமிட்டு தொலைபேசியைத் தந்தான்.

”தாங்யூ மை ‌ப்ரெண்ட்” என்ற போது
ஹாப்பி சுவிசைட்…. என்று எனக்கு வாயில் வந்தது..
என்றாலும்.. அதை மறைத்தபடியே  ஹாப்பி மரேஜ் லைப் என்றேன் கையைப் பிடித்துக் குலுக்கியபடியே. தனது மற்றைய கையாலும் எனது கையை வாஞ்சையுடன் பற்றி ” யூ லைக் மை பிரதர்” என்றும் ”ஐ சீ யூ அனதர் டே” ‌ என்றும் விடைபெற்ற போது… தற்கொலையாளி தப்பும் சந்தர்ப்பம் இருக்குமா என்ற சந்தேகத்துடன் எனது ரயிலைப் பிடிக்க ஓடித்தொடங்கினேன்.

ரயிலில் குந்தியிருந்து சில தசாப்தங்களை ரீவைன்ட் பண்ணி‌னேன். என்னையும் அப்போ சிலர் நான் தற்கொலை செய்வதாக நினைத்திருந்திருக்கலாம். நான் இன்றும் உயிரோடு இருப்பதால், நம்ம பாகிஸ்தான் நண்பரும் இன்னும் பல வருடங்கள் குற்றுயிராய் வாழ்வார் என்று புரிந்து.

அது சரி.. அவர் என்னை சந்திக்கும் வரை நான் உயிரோடு இருப்பேனா?


இன்றைய நாளும் நல்லதே!


.

7 comments:

  1. சாதரணமானவன் என்று சொல்ரீங்க.... தற்கொலைக்கெல்லாம் ஹெல்ப் பன்றீங்க. ரொம்ப பெறிய மனசு சார்.
    பதிவு, எழுத்து நடை நல்ல இருக்கு

    ReplyDelete
  2. நான் கூட என்னவோன்னு நினைச்சுட்டேன்!

    ReplyDelete
  3. பெரிசுங்க" திருமணம் .".......என சொல்கிறார்கள் நீங்கள் தற் கொலை என்கிறீர்கள். இப்படியே எல்லோரும் நினைத்தால் .........?
    வாழ்க்கையை வாழ்ந்து தான் பாருங்களேன்.

    ReplyDelete
  4. விசரன்...இது பினாத்தல் இல்ல.ஆனா கல்யாணம் நிலாமதி அக்கா சொல்றாப்போல அவ்வளவு கொடுமையானது இல்ல !

    ReplyDelete
  5. check ur phone bill...may be he called to asia ..or africa..!!!

    ReplyDelete
  6. வாசுகிMarch 19, 2012 9:57 pm

    ஜோக்கோ......ஜோக்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்