ஐம்பதிலும் ஆசை வரலாம் ... தப்பே இல்ல

எனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக இது 110 % உண்மைக் கதை.


முன்பின் அறியாத ஒருதொலைபேசி இலக்கத்தில் இருந்து  நோர்வேஜியமொழியிலான ஒரு குறுஞ்செய்தி இப்படிக்கூறியது

சஞ்சயன்! உன்னை அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ;)

எனது நிறத்தையுடடைய ஒரு பெருங்கவி கூறியது போன்று ”கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவம் இல்லாதொரு உருண்டை உருளத்தொடங்கியது” குறுஞ்செய்தியின் இறுதில் இருந்த கண்சிமிட்டும் சித்திரம் என் நெஞ்சுக்குள் சிமிட்டத்தொடங்கியது.

யாராக இருக்கும்? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுதேடினேன். பதில் கிடைத்தாயில்லை. அவள் யார்? எப்படி இருப்பாள்? கறுப்பா வெள்ளையா மஞ்சலா? எந்த இனத்தவள்? அ. முத்துலிங்கம் அய்யாவின் கதைகளில் வரும் குறிப்பிட்ட ”அந்தப் பகுதி” மட்டும் பெருத்த ஆபிரிக்க அழகியா? இல்லை பாரசீகத்துப் பைங்கிளியா? இல்லை பளிங்குபோன்ற வெள்ளைத் தேவதையா? அல்லது அற்புத அழகிகளைக்கொண்ட இனத்தவளான ஒரு தமிழிச்சியா?

தனியே வாழும் ஒருவனுக்கு, அதுவும் 47 வயது இளைஞனுக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தால் அவன் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஐந்து முறை அதிஸ்டலாபச்சீட்டு விழுந்தவனை விட மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தேன் நான்.

கற்பனை எகிறிப்பாய்ந்தது.

என் சாப்பாட்டை ஊறுகாய்தான் சுவையாக்குகிறது என்பதை அறிந்த சமயற்கலை வல்லுனன் நான்.  
வரப்போவது ஒரு அழகிய தமிழ் ராட்சசியாக இருந்தால், புட்டும் கருவாட்டுப்பிரட்டலும், இடியப்பமும் சொதியும், சோறும், பற்பல கறிகள், வறுவல்கள், பொரியல்கள், ரசம், பாயசம் .. நினைக்கவே வயிறு நிறைந்தது போன்றிருந்தது.

நமக்குத்தானே சாப்பாட்டில் இதுதான் வேண்டும் என்ற நியதியில்லையே.
எதையும் கொட்டிக்கொள்ளும் பன்றி நான். எனவே ”பின் பக்கம்” பெருத்த ஆபிரிக்க அழகி கிடைத்தாலும் அவளுக்காக அவளின் சாப்பாட்டையும், அவளையும் ரசிக்கமாட்டேனா, என்ன?. அந்தளவுக்கு நான் ஒன்றும் மட்டமான ரசிகன் அல்லவே.

ஒருவேளை வருபவள் தென்கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த, சாண்டில்யனின் ”கடற்புறா” கதாநாயகி, மஞ்சலளகியைப் போன்றவளாக இருந்தால், தவளை பாம்பு கரப்பொத்தான் போன்றவற்றையும் ஒரு கைபார்க்கலாம், என்று கற்பனையோடிக்கொண்டிருந்தது.

அவள் யார் என்பதை அறியவேண்டும் என்ற வேகத்தில் கணிணியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். (கண்மணியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன் என்று நீங்கள் வாசித்தால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல)

நோர்வேயில் தொலைபேசி எண் இருப்பின் இணையத்தின் மூலமாக பெயர், விலாசம் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். எனவே அவளை அங்கு தேடுவோம் என்று நினைத்தபடியே, அவளின் தொலைபேசி இலக்கத்தை எழுதி ”தேடு” என்று தட்டிவிட்டேன்.

கணிணி அவளைத் தேடுவதற்கு பாவித்த கணப்பொழுதினுள் அவள் பெரும் பணம்படைத்தவளாக இருப்பாளோ? அப்போ  நாம் கரையேறிவிடலாம் என்றெல்லாம் கற்பனைக்குதிரை கடிவாளத்தை அறுத்தெறிந்தபடியே காற்றில் கடுகிக்கொண்டிருந்தது.

கணிணி, அந்தப் பெயரில் உள்ளவர், தனது பெயர் விலாசத்தை வெளியிடவிரும்பவில்லை என்று குண்டைத்தூக்கிப்போட்டது. யானை மிதித்த தக்காளிபோன்றாயிற்று மனம்.

இலக்கம் இருக்கிறதே, நேரடியாகவே பேசலாமே என்று ஆறுதல் சொல்லிற்று தோல்வியை ஏற்கவிரும்பாத மனம்.

எப்படி ஆரம்பிப்பது? என்ன சொல்வது? என்றெல்லாம் சிந்தித்தேன்.
”ஹீம் ... நான் சஞ்சயன் பேசுகிறேன். நீங்கள் யார் பேசுவது?” என்று எனது அழகிய குரலால் இரண்டு தடவைகள் பயிற்சி செய்து பார்த்துக்கொண்டேன். குரலில் சற்று அன்பு, ஆண்மை கலந்து பேசிப்பார்த்தேன். திருப்தியாய் இருக்கவில்லை. மீண்டும் மீண்டும் வார்த்தைகளையும், குரலின் அளவு, ஆண்மையின் அளவுகளை மாற்றிப்பார்த்து இறுதியில் இப்படித்தான் பேசுவது என்று முடிவுசெய்துகொண்டேன்.

தொலைபேசி எடுக்குமுன் குளியலறைக்குள் சென்று கண்ணாடியின்முன் நின்று பேசிப்பார்த்தேன். எனது அழகிய வண்டி வெளியே தெரிந்தது. அதை எக்கிப்பிடித்தபடியே மீண்டும் சொல்லிப்பார்த்தேன். குரலும், நானும் அழகாய் தெரிந்தது போலிருந்தது எனக்கு.

கதிரையில் அமர்ந்துகொண்டேன். தொலைபேசியை எடுத்தேன். குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் இரண்டுதடவைகள் வாசித்தேன். ”உன்னை அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்ற வார்த்தைகள் அன்றொரு நாள் எஸ். ராமகிருஸ்ணனின் ”காற்றில் யாரோ நடக்கிறார்கள்” வாசித்தபோது காற்றில் எப்படி நடப்பது என்று தோன்றிய சந்தேகத்தை தீர்த்துவைத்தது.

அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டேன்.

மணி அடித்தது, மணி அடித்தது, மணி அடித்துக்கொண்டே இருந்தது.
எவரும் எடுக்கவில்லை. மனம் பொறுமையற்று அலைந்தது. மீண்டும் அழுத்தினேன் அந்த இலக்கத்தை.

மணி அடித்தது, மணி அடித்தது, தொடந்து அடித்துக்கொண்டே இருந்தது. வெறுப்பில் தொலைபேசியை துண்டிக்க நினைத்துபோது மறுகரையில் பெண்ணின் குரல் கேட்டது.

நீங்கள் யார் பேசுவது என்றேன். பெயரைச் சொன்னாள் அப் பெண். சரி என்னை யாருக்கோ பிடித்திருப்பதாய் சொன்னீர்களே அது யார்? என்றேன் ஆண்மையும், அதிகாரமும் அன்பும் கலந்து.


க்ளுக் க்ளுக் என்று சிரிக்கும் சத்தம் கேட்டது மறுபக்கத்தில் இருந்து. ”ஓ அதுவா. என் வீட்டில் உன்னைச் சந்தித்த எனது நண்பிதான் அது” என்றது தொ(ல்‌)லைபேசி.


இவ்விடத்தில் சிறியதொரு flashback



இன்று காலை நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசி சிணுங்கியது. எடுத்தேன்.

நீதானா கணிணி திருத்துவது என்று ஒரு பெண்குரல் கேட்டது. ஆம் என்று கூறியபோது, மதியம் வீட்டுக்கு வா. கணிணி திருத்தவேண்டும் என்று கட்டளையிட்டார் அப் பெண். விலாசத்தை வாங்கிக்கொண்டேன்.

நான் அவா் வீடு சென்ற போது அவரும் அவரின் அழகிய நண்பியும் அங்கிருந்தார்கள். அவர்களுடன் பேசியபடியே கணிணியை திருத்தினேன். கேக், தேனீர், பழங்கள் என்று அந்தப் பெண்ணிண் நண்பி என்னை பலமாய் கவனித்தார். அவரது ஐபோன் பிரச்சனையையும் அவரருகில் உட்கார்ந்திருந்து தீர்த்துவைத்தேன்.

எங்கள் பேச்சு வாழ்க்கை பற்றித் திரும்பியது. அவர் தனியே வாழ்கிறேன் என்றார். நானும் அப்படியே என்றேன். அவருக்கு வாசிப்பில் நாட்டுமுண்டு எனக்கும் அப்படியே. நாம் எங்களை மறந்து உரையாடுவதைக் கண்ட  நண்பி எங்களை தனியேவிட்டுவிட்டு ‌தனது நாயுடன் வெளியே சென்றார். நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். எனக்கு மீண்டும் ஒருமுறை தேனீர் ஊற்றித்தந்தார் அவர்.

கணிணி திருத்தி முடித்தேன். நாயுடன் சென்ற நண்பி வீடு திரும்பியபின் நான் வீடுசெல்லப் புறப்பட்டேன். இருவரும் வாசல்வரை வந்து வந்து வழியனுப்பினார்கள். நண்பியோ எனது ஆஸ்தான கணிணி திருத்துபவன் நீதான் என்பது போல் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினார்.

வீட்டுக்கு வெளியே நின்றபடியே கைகாட்‌டி விடைபெற்றேன்.

வீட்டுக்குள் இருந்து 70 வயதான அவ்விருவரும் கைகாட்டியபடியே, பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் பனிகொட்டிய நிலத்தில் வழுக்கிவிழாமல் நடப்பதற்கு முயன்றபடியே நடக்கத்தொடங்கினேன்.

4 comments:

  1. சுவாரஸ்யம்
    மிகவும் ரசித்துப் படித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. after long time i read your post.
    good story

    ReplyDelete
  3. கதை ஆரம்பித்திலே முடிவு இப்படிதான் இருக்கும் என முடிவு செய்யலாம் ஆனால் அழகாக சொல்லி சென்ற முறையால் கதை மனதை கவர்ந்தது. பாராட்டுக்கள்
    /

    ReplyDelete
  4. // பாட்டிகள் அனுபவசாலிகள் பல தமிழ்ப் பெண்களை விட மாதம் பல தடவை சந்தோசமாக இருப்பார்கள் .. அவர்கள் வாயை சண்டை பிடிப்பதற்கு மாத்திரம் பாவிப்பதில்லை ..///

    நண்பர் உண்மையை சொல்லிச் சென்று இருக்கிறார்

    ReplyDelete

பின்னூட்டங்கள்