உண்டியல்

நோர்வேயில் ஒரு பிரபலமான குரங்கு இருந்தது. அதன் பெயர் ஜுலியஸ்.  வங்கியில், எனது மூத்த மகளுக்கு முதன் முதலில் வங்கிக்கணக்கு திறந்தபோது ஜுலியஸ் இன் உருவத்திலான ஒரு உண்டியலையும் கொடுத்தார்கள். அவள் சிறியவளாக இருக்கும்வரையில் அதனால் பிரச்சனை வரவில்லை.

அவளுக்கு 6 வயதாக இருக்கும்போது என்னிடம் ஒரு பார்பி பொம்மை வாங்கித்தருமாறு கேட்டாள். சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு ஒரு பார்பி  பொம்மை வாங்கிக்கொடுத்திருந்தமையினால் அவளிடம், நீ காசு சேமித்து உனது பணத்தில் வாங்கவேண்டும் என்றேன். அதன்பின்னால் வரப்போகும் ஆபத்தை உணராமலே.

”என்னுடைய ஜுலியஸ் உண்டியலைத் தா” என்றாள்”.
”அம்மா அது வீட்டில் இருக்கும் எல்லோருடைய உண்டியல். அதனுள் 20 குறோண் நாணயங்கள் மட்மே போடுவது எனவே அதைத் தர முடியாது” என்றேன்.

”சரி, வா வங்கிக்குப் போவோம்.  எனக்கு புதிது ஒன்று வாங்கித் தா” என்று அடம்பிடித்தாள்.

வங்கிக்கு அழைத்துப்போனேன்.  நாம் வாழ்திருந்ததோ ஒரு சிறு கிராமத்தில். அனைவரும் அனைவரையும் அறிவாகள். வங்கியல் நின்றிருந்த பெண் மகளை நன்கு அறிவார்.

”வா .. காவியா.. வா .. வா”  என்று ஆரம்பித்ததும் என்னை மறந்துபோனாள்,  மகள். அந்தப் பெண்ணுடன் உரையாடி, வங்கியில் இருந்த ஜுலியஸ்  உண்டியல் ஒன்றினையும், பலூன்கள், சித்திரம் வரைவதற்கான படங்கள், நிறம் தீட்டும் பென்சில்கள் என்று ஒரு தொகை பொருட்களுடன்  அந்தப் பெண்ணுக்கு ஒரு முத்தம்  லஞ்சமாகக் கொடுத்தபின் என்னுடன் புறப்பட்டாள்.

வாகனத்தினுள் ஏறி உட்கார்ந்தவுடன் வாகனத்தில் இருந்த சில்லறைகளை ஜுலியஸ்இன் வயிற்றினுள் போட்டாள். பின்பு ” அப்பா, உன் பணப்பையைத் தா, என்றாள். கொடுத்தேன். இப்போது ஜுலியஸ் முன்பைவிட சற்று கொழுத்தது.

வீட்டுக்கு வந்ததும் தங்கையை அழைத்து ஜுலியஸ்ஐ காட்டினாள். அவளுக்கு 2 வயது என்பதனால், அவள் ஜுலியஸ்ஐ குலுக்கி அதனில் இருந்து வந்த ஒலியில் மகிழ்ந்திருந்தாள்.

வீட்டுக்குள் இருந்த சில்லறைகளை ஓடி ஓடிச் சேர்த்தாள். உண்டியலினுள் இட்டாள். தங்கையையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டாள். சாமியறையில் இருந்த சில்லறைகளிலும் சிலது காணமல் போயின.

மறுநாள் நான் வேலையால் வருகிறேன் வீட்டில் ஒரு கடை திறந்திருந்தாள். அதில் எனது கணிணி, உடைகள், சவர்க்காரம், சவரம்செய்யும் பெருட்கள் இருந்தன. தங்கையின் சூப்பியையும் விற்பனைக்கு வைத்திருந்தாள். எனது பொருட்களுக்கு 10 குறோணர்கள் கொடுத்துப் பெற்றுக்கொண்டேன். தங்கையின் சூப்பியின் விலை ஒரு குறோணாக இருந்தது. ஆனால் அவள்  அதைக் கேட்டு அழத்தொடங்கியபோது  அப்பாவிடம் பணம்வாங்கிவா என்று அனுப்பினாள். அதற்கும் பணம் கொடுத்தேன்.

அன்றிரவு தூங்கும்போது அவள் தூங்குவதற்கும் நான் பணம்கொடுக்கவேண்டியிருந்தது. அன்றிரவு ஜுலியஸ்ஐ அணதை்தபடியே   தூங்கிப்போனாள்.

இதன்பின்,  என்னுடன் கடைக்கு வருவதற்கு அடம்பிடித்தாள். கடையில் சில்லறைகிடைத்தால் அதை பறித்துக்கொண்டாள். காலப்போக்கில் கடையில் வங்கி அட்டைபாவிக்கவும் தடைவந்தது. நீ வங்கி அட்டையை பாவித்தால் சில்லறை தருகிறார்கள் இல்லை என்று வாதிட்டாள்.

சில நாட்களில் இத்தனை முத்தங்களுக்கு இத்தனை குறோணர்கள் என்று வாங்கிய நாட்களும் உண்டு. வீட்டுக்கு அருகில் இருந்த காட்டுக்குள் இருந்து பூக்களை பறித்துவந்து பூங்கொத்து என்று  என்னிடம் விற்றாள். அதே பூங்கொத்தை மறுநாளும் நான் விலைகொடுத்து வாங்கிய காலமும் இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  ”உனக்கு தேனீர் கொண்டுவந்து தருவேன், சாப்பாடு தீத்துகிறேன் பத்து குறோன் தா ” என்றாள். இப்படியான சேவைக்கு பத்து குறோணர்கள் காணுமா? நான் அதிகமாய் கொடுத்தேன். முத்தம் ஒன்று மேலதிகமாய் கிடைத்தது.


சில நாட்களில் நான் நிலத்தில் படுத்திருந்தபடியே  எனக்கு முதுகு வலிக்கிறது எனது முதுகில் ”ஏறி நடவுங்கள்”  என்பேன்.  முதலில் மூத்தவள் நடப்பாள். அப்புறமாய் தங்கையின் கையைப்பிடித்து நடாத்துவாள். என்மீது துள்ளி துள்ளி, விழுந்து, சிரித்து விளையாடியபின் அதற்கும்சேர்த்து பணம் கேட்பாள். ”தங்கையும் நடந்தாளே அவளுக்கும் பணம் கொடு ” என்று கூறி... தங்கைக்கு கிடைக்கும் பணத்தையும் தனது உண்டியலுக்குள்  அவளைக்கொண்டே போட்டுக்கொள்வாள்.

வீட்டில் இருந்த புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்திற்கும் வாடகை அறவிட்டாள். நான் சாய்ந்திருக்கும் சாய்மனைக் கதிரைக்கும் வாடகை கொடுக்கவேண்டியிருந்தது.

ஏறத்தாள ஒரு கிழமைக்குள் அவளது ஜுலியஸ்இன் கழுத்துவரை சில்லறை நிரம்பியிருந்தது. பெருமையில்  அவள் மனமும், முகமும் பூரித்திருப்பதை ரசித்துக்கொண்டிருந்தேன் நான்.

இந்த உண்டியல் பழக்கம் அவளுக்கு 10 வயதாகும்போது தங்கைக்கும் தொற்றிக்கொண்டது. நான் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம்போலானேன்.

ஒரு நாள் அவளின் உண்டியலை திறந்து எண்ணியபோது 2000 குணோணர்கள் இருந்தது. அதில் 1500 குணோணர்களை வங்கியில் வைத்தாள். மிகுதி 500 அவளிடம் இருந்தது.

ஒரு நாள் எனக்கு சற்று பணத்தட்டுப்பாடு வந்தபோது ”அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் காது கடனாகத் தாங்களேன்” என்றேன்.
”எவ்வளவு”
”500”
”பொறுங்கோ” என்றவள் …. உள்ளே சென்று பணத்துடன் வந்தாள்.
”இந்தாங்கோ”
எண்ணிப்பார்த்தேன். 400 குறோணர்கள் இருந்தது.
”என்னடி … 400 தான் இருக்கிறது  என்றேன்”
”ஒம்.. நீங்க தரும்போது 500 குறோணர் தரவேண்டும்” என்றாள்.

45 வருடங்களுக்கு முன் நான், அம்மாவின் பணப்பையில் இருந்து திருடிய பணத்திற்கான  தண்டப்பணம் இது  என்று நினைத்துக்கொண்டேன்.


9 வருடங்களின் பின்னான இன்று காலை,  சிறிது பணத்தட்டுப்பாடு வந்தபோது,  எனது உண்டியலில் கைவைத்தேன்.  அங்கு புதைத்திருந்தது இந்தக் கதை.

நினைவுகள் அற்புதமாய் தாலாட்டும்.


இது எனது காவியாவுக்கும், அட்சயாவுக்கும் சமர்ப்பணம்

2 comments:

  1. அழகான அருமையான இனிமையான அனுபவங்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

பின்னூட்டங்கள்