ஆற்றாமைக் கோபம்

மூன்று நாட்களாக ஒரு கசப்பான உண்மையின் மீது நடந்துகொண்டிருக்கிறேன். மனம் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற  ஆற்றாமையின் கோபத்தில் உழன்றுகொண்டிருக்கிறது. தூங்கினாலும், விழித்திருந்தாலும் இதுவே நினைவாய் இருக்கிறது. மனம் படபடக்கிறது, நிதானத்தை இழந்து பேயாட்டம் ஆடுகிறது. 

தோள் கொடுப்பவனைவிட, காலை வாரிவிடுபவனைக் கொண்டாடும் உலகம் இது என்று பல முறை அனுபவப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே புதைகுழியில் விழுந்தெழுகிறேனே என்று என்மீதே எனக்கு வெறுப்பாய் இருக்கிறது. இது மனதினுள் ஒருவித ஆற்றாமைக்கோபத்தை கொந்தளிப்பு நிலையில் உருவாக்கியிருக்கிறது.

சீ .. உன் பெறுமதி இவ்வளவுதானா, என்று உள்ளுணர்வு அரற்ற, மனது உதாசீனத்தின் வலி எத்தகையது என்பதை உணர்ந்து, தூக்கி எறியப்பட்ட அச்சாணிபோன்றதொரு உணர்வில் அமைதியற்று கிடக்கிறது.

இது இந்தக் கதையின் flashback. இனித்தான் கதையே தொடங்குகிறது.

நண்பர் ஒருவர் கால்முறிந்து நடக்கமுடியாது இருக்கிறார். அவர் ஒரு கடைக்குச் செல்லவேண்டும் என்றார். அவரது வாகனத்தில் அழைத்துப்போனேன்.

வாகனத்தரிப்பிடத்தில் இருந்து கடை அதிக தூரமாய் இருந்தது. எனவே கடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி நண்பரை இறக்கிவிட்டு நான் வாகன தரிப்பிடத்தில் நின்றிருந்தேன். தனது வேலை முடிந்ததும் நண்பர் அழைத்தார். வாகனத்தை  கடைக்கருகில் செலுத்தினேன். பாதை குறுகலானது. கடைக் கடந்து 30 மீற்றர்கள் மட்டுமே செல்லலாம்.

நண்பர் தனது நாலுகால்களினாலும் வந்து ஏறிக்கொண்டார். சற்று இருட்டியிருந்ததனாலும், தெருவில் பலர் நடமாடியதாலும் வாகனத்தை றிவர்ஸ் ஆக செலுத்த விரும்பவில்லை. எனவே வானத்தை  முன்னால் இருந்த சிறிய இடத்தில் திருப்பிக்கொண்டிருந்தேன். சிறிய இடமாகையால் முன்னே வந்து பின்னே சென்று மீண்டும் முன்னே வந்து  என்று சற்று சிரமப்பட்டு வாகனத்தை திருப்பிக்கொண்டிருந்தேன்.

இந்த இடத்தில் இரு நோர்வேஜிய சீனியர் சிட்டிசன்கள் இங்கு வாகனத்தை செலுத்த முடியாது என்பதுபோல சைகை செய்தும், மற்றைய மனிதர்களுக்கு  வாகனத்தைக் காட்டி எதையோ  கூறியதைக் கண்ட  எனது நிதானம் நோர்வேயின் எல்லையை கடந்து பறந்துபோனது.

எனக்கு  இரத்தம் கொதிப்பதைக் கண்ட நண்பர் ”சும்மா இரும், சும்மா இரும்”என்று அடக்கினார்.

”வெள்ளையின்ட திமிர அடக்காவிட்டால் சரிவராது, நீர் சும்மா இரும் என்றேன், நண்பரிடம் கடுமையாக.
ஏதும் கதைத்தால் வாகனத்தால் இறக்கிவிடுவானோ என்ற பயத்தில் நண்பர் பேசாதிருந்தார்.

கதைவைத்திறந்து இறங்கி நண்பரின் ஊன்றுகோலை எடுத்து வெளியே காட்டி, வாகனத்தினுள் நடக்கமுடியாத ஒருவர் இருக்கிறார் என்றேன்.

நண்பர் ”வேண்டாம், வேண்டாம், பாவம், வயதுபோன மனிசி” என்று கெஞ்சினார்.  ”மவனே வீட்டுக்கு நடந்துபோவாய்” ... என்ற ஒரு பார்வையில் அவரை அடக்கினேன்.

கையில் இரண்டு ஊன்றுகோல்களுடன், சிவந்த கண்ணுடன், மொட்டை மினுங்க போர்க்கோலம் பூண்டு நின்றிருந்த கரிய இராவணணை அவர்கள் கண்டிருக்கவில்லை என்று அவகளின் முகம் கூறியது. கடைத்தெரு அதிர்ந்துகொண்டிருந்தது.

”கறுப்பன் என்ற இளக்காரமா உனக்கு? எங்களுக்கும் சட்டம்தொரியும், நடக்கமுடியாதவர் இருப்பதாலேயே இங்கு வந்தேன். தவிர இங்கு வாகனம் செலுத்தப்படாது என்று எதுவித அறிவித்தலும் இல்லை.” வாயில்தூசணம் சீழ்போல் வடிந்தது. வாகனத்தின் கதவினை அறைந்து சாத்திக்கொண்டேன்.

நண்பர் கதவு களன்றுவிட்டதா என்று நிட்சயம் பயந்திருப்பார். அவர் எதுவும் பேசவில்லை.

காரை அதிவேகத்துடன் செலுத்தினேன். எனது சொற்களைப்போன்று சில்லின் கீழ் அகப்பட்ட சிறுகற்கள் சிதறிப் பறந்தன.

நண்பர் முடிந்தளவுக்கு என் கவனத்தை ஒருமுகப்படுத்த முயன்றார். அவருக்கு தனது மற்றைய காலை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற பயம் வந்திருக்கலாம்.

இது நடந்து முடிந்து 10 நிமிடங்களின் பின்... மனச்சாட்சி எழும்பி நின்றி முகத்தில் அறைந்துகொண்டிருக்கிறது. நானும் முடியுமானவரையில் அடி என்று விட்டிருக்கிறேன்.

எங்கோ  காட்டவேண்டிய கோபத்தினை, நியாயமின்றி இரண்டு முதியோர்கள்மேல் காட்டியிருக்கிறேன். நான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது பரிந்திருக்கிறது. மனம் கூனிக்குறுகியிருக்கிறது.

எப்போது இந்த சினம், கோபம், ஆத்திரத்தை அடக்கியாளப்போகிறேன்?

2 comments:

  1. சில நேரம் இந்த கோபமும் நல்லதுதான் அதனால் தானே ஒரு பதிவை நீங்கள் எழுத முடிந்திருக்கின்றது!

    ReplyDelete
  2. "மீண்டும் மீண்டும் அதே புதைகுழியில் விழுந்தெழுகிறேனே என்று என்மீதே எனக்கு வெறுப்பாய் இருக்கிறது"

    என் மனதில் ஓடும் இதே வார்த்தைகள் சிலமுறை

    ReplyDelete

பின்னூட்டங்கள்