”வம்ச விருத்தியால்” வந்த வினை


புகையிரதத்தில் ஏறி பயணப்பொதியை அருகில் வைத்துக்கொணடு குந்திக்கொண்டேன். கையில் முத்துலிங்கமய்யா எழுதிய வம்ச விருத்தி இருந்தது என்பதால் நமிதாவை கண்ட பழசுகள் மாதிரி எனது சுற்றாடலை மறந்து புத்தகத்தினுள் ஐக்கியமாகி்ப்போனேன்.

வம்சவிருத்தியில் முழுவிலக்கு என்றொரு கதை இருக்கிறது அக்கதையில் மிகவும் ஆழ்ந்து போயிருந்தேன்.

கதையின் நாயகன் கணேசானந்தன், நாயகி சங்கீதா. சங்கீதா தான் வாழ்ந்த ஆபிரிக்கநாட்டு குடியுரிமை கிடைத்தபின்தான் கணேசானந்தனை தொட விடுவாள், அதன் பிறகுதான் குழந்தை குட்டி எல்லாம் என்று சத்தியம் செய்திருந்ததனால் கணேசாணந்தன் அடிக்கடி குடியுரிமைக்கு விண்ணப்பித்துக் கொண்டிருந்தார். கணேசானந்தனின் அவசரம் அந்த குடியுரிமை வளங்கும் அதிகாரிகளுக்கு இல்லையாதலால் அவர்கள் இவரின் விண்ணப்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்த இடத்தில்தான் நான் அந்தக் கதையை அந்த புகையிரதத்தில் இருந்து வாசித்துக்கொண்டிருந்தேன்.

கதையில் அன்று கணேசானந்தனுக்கும் மனைவிக்கும் குடியுரிமை கிடைக்கிறது. கணேசாணந்தன் வேலைக்கு நிற்காமல் வீடு நோக்கி வம்ச விருத்திக்காக ஓடுகிறார். கதை இப்படி மிகவும் செக்சியாகவும், திரில் ஆகவும் போய்க்கொண்டிருக்கிறது. நானும் கணேசாந்தனின் வயதையும் காலங்களையும் கடந்திருப்பதால் கணேசானந்தனின் ஓவர் ஸ்பீட் நடவடிக்கைகளை ரசித்துக்கொண்டு அவர் பின்னால் மெய்மறந்திருந்த போதுதான் அது நடந்தது.

தற்செயலாக ஜன்னலால் வெளியே பார்த்த போது எனது இதயம் எனது தொண்டையால் வெளியே வந்து பல்லுக்குள் சிக்கியது போலிருந்தது. ஆம், நான் இறங்கி இன்னுமொரு புகையிரதம் எடுக்கவேண்டிய ஸ்ரேசனை கடந்து கொண்டிருந்தது புகையிரதம்.

நான் ஒஸ்லோ போகும் விமானத்தை பிடிப்பதற்காக லண்டனில் இருந்து விமானநிலையம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏற்கனவே நேரம் தாமதமாகியிருந்ததால் பயந்து கொண்டிருந்தேன். இப்போது இன்னும் நேரம் தாமதமாகப்போகிறதே என்று பயம் தொற்றிக்கொண்டது.

அடுத்து வந்த ஸ்ரேசனி்ல் இறங்கியோடினேன். எனது அவசரம் புரியாத மற்றவர்கள் வழியை அடைத்தபடி நடக்க மனதுக்குள் தூசணத்தால், திட்டியபடியும் வாயால் எக்ஸ்கியூஸ்மீ எக்ஸ்கியூஸ்மீ என்றபடியும் படிகளை, அனுமான் பாய்ந்து பாய்ந்து கடலைக் கடந்து இலங்கைக்கு வந்தது போல் ஓடிப்போய் உதவியாளர் ஒருவரிடம் கட்வீக்கு எப்படி போவது என்றேன். அவரோ மிகவும் சாசுவதமாக பல்லு தோண்டும் ஈர்க்கால் பல்லைத் தோண்டி முடித்த பின், மூன்றாம் இலக்க ப்ளாட்போர்ம்க்கு போய், வரும் முதல் புகையிரதத்தில் "கிழப்பம் ஜங்ஸசன்" போ, அங்கிருந்து கட்வீக் போகலாம் என்றார். வாயு வேகத்தில் மூன்றாம் பிளாட்பாரத்தில் நின்றபோது அடுத்து வரும் புகையிரதம் 15 நிமிடங்கள் பிந்தி வரும் என கணணி காட்டிக் கொண்டிருந்தது. பாவி போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்று எனது நண்பர் சிவா சொல்வது ஞாபகத்தில் வந்து போனது. நேரமோ 11.40. எனது விமானம் 13.10க்கு வெளிக்கிடுவதாய் இருந்தது.

மனம் என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தது. எனது ஆற்றாமையை, "இந்தாளாலதானே இவ்வளவும்" என்று முத்துலிங்கமய்யவை திட்டித் திட்டித் தீர்த்துக்கொண்டேன்.

கணணியைப் பார்ப்பதும் தண்டவாளத்தைப் பார்ப்பதுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. வம்ச விருத்தியை வாசித்த போது கணேசானந்தனின் திருவிளையாடலால் மனைவி வாந்தி எடுக்கிறாள், உணவை மறுக்கிறாள். அது கர்ப்பமா என்று அறிய கணேசானந்தன் மனைவியுடன் உற்சாகமாய் வைத்தியசாலைக்குப் போகிறார். அங்கு அது கர்ப்பம் அல்ல என்று தெரிவிக்கப்பட அவர்கள் இருவரும் துயருறுகிறார்கள்.

நானும் எப்படா இந்த புகையிரதம் வரும் என்று துயருற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒலிபெருக்கி ப்ளாட்போம் 6 இல் வரவிருக்கும் புகையிரதம் "கிழப்பம் ஜங்ஸசன்" போகும் என்றும், அப் புகையிரதம் இன்னும் ஒரு நிமிடத்தில் புறப்படும் என்பதும் ஒரு காதுக்குள்ளால் போய் மறு காதால் வெளியே வருமுன்பே நான் நாலுகால் பாய்சலில் மீண்டும் எக்ஸ்கியூஸ்மீ, எக்ஸ்கியூஸ்மீ என்றபடியே பாய்ந்தோடி 6ம் ப்ளாட்பாரத்தில் நின்றபோது புகையிரத்தின் கதவுகள் மூடப்படுவது தெரிந்தது.

கையில் இருந்த பயணப் பொதியை இரண்டு கதவுகளுக்கும் நடுவில் வைத்து கதவு மூடுவதை தடுத்து உட்புகுந்து கொண்டேன். ரேஸ் ஓடிய குதிரை போல் மேல்மூச்சும் கீழ்மூச்சும் சைட்மூச்சும் வந்து கொண்டிருந்தது.

"கிழப்பம் ஜங்ஸசன்" இல் இறங்கி 13ம் இலக்க ப்ளாட்பாரத்தை நோக்கி.... வாலில் கிடுகோலை கட்டுப்பட்ட மாடு ஓடவது போல தறிகெட்டு ஓட எனது பயணப்பொதி அதே வேகத்தில் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்தது. 13ம் ப்ளாட்பாரத்தில் இறங்கிய போது எனது புகையிரதம் புறப்பட்டுப் போனது.

வெறுத்துப்போய் கணணியைப் பார்த்தேன். நேரம் 11.58 என்றிருக்க அடுத்த புகையிரதம் 12.08க்கு என்றிருந்தது. எனது புகையிரதம் வந்தபோது கணேசானந்தனின் மனைவி தனக்கு இனி குழந்தை பிறக்காது என்னும் உண்மையை ஏற்கப் பழகியிருந்தார். அவருக்கு மீன் விற்கும் பெண்ணின் பெயர் "ஐலவ்யூ" (கதையை வாசித்தால் காரணம் புரியும்). "ஐலவ்யூ" விற்கும் மீனை மட்டுமே அவர் வாங்குவார். "ஐலவ்யூ" முதுகில் "கரிக்குருவி" என்னும் குழந்தையை சுமந்துகொண்டிருப்பாள்.

கட்வீக் புகையிரத்தில் ஏறி ஒரு இடத்தில் குந்திக் கொண்டேன். நேரம் 12. 10 எனக் காட்டிக் கொண்டிருந்தது.எனது போர்டிங் கார்ட்ஐ ஏற்கனவே ப்ரின்ட் எடுத்திருந்ததனால் அதை எடுத்துப் பார்த்தேன். கேட் 12.40க்கு மூடப்படும் என்றிருந்தது. எனது புகையிரதம் விமானநிலையத்தை அடைய 30 நிமிடங்கள் வேண்டும். நேரம் அப்போ 12.40 ஆகிவிடும். இன்றைய பயணம் அதோ கதிதான். இன்று புதிய டிக்கட் எடுப்பதானால் 300 டாலர் வேண்டும் என்று நினைத்தபடியே கணேசானந்தனின் பிரச்சனைக்குள் புகுந்தேன்.

நான் புகையிரதத்தால் இறங்கும் முன்.. கணேசானந்தன் ஒரு நாள் வேலையால் வீடு திரும்புகிறார். வீட்டினுள் ஆபிரிக்கப் பாட்டு கேட்கிறது. பாடலின் அர்த்தம் "கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி" என்றிருக்கிறதாம். உள்ளே மனைவி ஆபிரிக்கப் பெண்களைப் போல் பிருஸ்டத்தை ஆட்டி ஆட்டி நடனமாடுகிறாள். அது கணேசானந்தனுக்கு ரொமான்டிக் மூட்ஐ ஏற்படுத்துகிறது. அன்றிரவு அவர் சங்கீதாவை அருகே இழுத்தணைக்கிறார். அவர்களுக்கு நடுவே அவர்கள் தத்தெடுத்த கரிக்குருவி படுத்திருக்கிறாள். இந்த இடத்தில் தான் எழுத்தாளர் முத்துலிங்கமய்யா பெரியதொரு லாஜிகல் தவறு செய்கிறார்.

(அது பற்றி கேட்டு அவருக்கு மின்னஞ்சல் போட்டிருக்கிறேன். பதில் வந்ததும் சொல்கிறேன்.)

அதுவரை பொறுக்கமுடியாதவர்கள் "வம்சவிருத்தி" என்னும புத்தகத்தை வாங்கி 6வது கதையாகிய "முழுவிலக்கு" கதையின் இறுதிக்கு முன் பந்தியை வாசியுங்கள். உங்களுக்கு அந்த விடயத்தில் அனுபவமிருந்தால் அந்த லாஜிக் பிழை புரியலாம்.

நேரம் 12:43க்கு புகையிரதம் விமானநிலையத்தை அடைந்து நிற்க முதலே, பீக்கு முந்திய குசு மாதிரி பயணப்பொதியுடன் கதவருகில் நின்று, புகையிரதம் நின்றவுடன் வெளியே பாய்ந்து, ஓடி, படிகளில் தாவி, நடந்து ஓடி, 12.50க்கு கையில் இருந்த தண்ணிப்போத்தலை குப்பைக்குள் எறிந்து வேர்த்தொழுக ஓடிவரும் என்னைக் கடுமையாக பார்த்தபடியே நிறுத்தினார் கண்டிப்பான முகத்தையுடைய, கண்ணாடி போட்ட, பெருத்த உதட்டையும், பிட்டத்தையும் கொண்ட கணேசானந்தனின் கண்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

எனது நிலையை விளக்கினேன். தலையை ஆட்டியபடியே குனிந்து கண்ணாடிக்கு மேலால் பார்த்து யூ ஆர் ஆல்ரெடி டூ லேட் என்றார். நான் பாஸ்போட்டையும், கையில் இருந்த "வம்சவிருத்தி" புத்தகத்தையும் மேசையில் வைத்தேன். பாஸ்போட்டைடையும் என்னையும் நாலைந்து தடவை பார்த்தார். பின்பு மேசையில் இருந்த வம்சவிருத்தி புத்தகத்தின் பின்னட்டையில் இருந்த ஒருஆணழகனைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே தொலைபேசியில் தொடர்பு கொண்டார். பதில் கிடைக்கவில்லை. என்னை வா என்றழைத்தபடியே நடந்தார். அவர் பின்னால் நடந்த போது கணேசானந்தனின் மனைவி ஆடிய நடனம் நினைவிலாடியது.(ரொமான்டிக் மூட் வரும் நிலையில் நான் இருக்கவில்லை). பலர் வரிசையில் காத்திருந்தார்கள். அவர்களைத் கடந்து என்னை சிறப்பு விருந்தினன் போல் அழைத்துப்போய் பாதுகாப்பதிகாரியிடம் ஏதோ சொன்னார். அவரும் ஒரு கறுப்பினத்தவராயே இருந்தார். பெல்ட், கணணி, திறப்புகள், பணப்பை, சப்பாத்து எல்லாவற்றையும் கழட்டி வைத்தேன்.

பாதுகாப்பு கதவை "ஒஸ்லோ முருகா" "ஒஸ்லோ முருகா" என்று சொல்லியபடியே கடந்தேன். நம்மூர் முருகனா கொம்பா? கேட்டமாதிரியே மனிதர் என்னை ஒரு சிக்கலில்லாமல் வெளியேற்றிவிட்டார். மடிக்கணணி, பணப்பை, திறப்புகள், இத்தியாதி இத்தியாதி பொருட்களை எல்லாவற்றையும் பயணப்பையில் அடைத்தெடுத்து ஓடினேன். பெல்ட் கட்டாததால் காற்சட்டை களன்று விடும் நிலையிலும், ஓடினேன் ஓடினேன். கட்வீக் விமான நிலையத்தின் கேட் 20 வரை ஓடினேன். நகரும் படிகளிலும் நகராத படிகளிலும் ஓடினேன். நேரம் 12: 57 க்கு மரதன் ஓடிய களைப்பில் 20ம் இலக்க வாசலில் நின்றேன்.

ஒஸ்லோ முருகனின் கருணையே கருணை, கதவு திறந்து கிடந்தது. கதவருகில் ஒரு பாதுகாப்பதிகாரியுடன் ஒரு சிறுவனும் அவனின் அப்பாவும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவனின் கால்பந்தை (காற்றடித்திருந்த நிலையில்) அனுமதிக்க முடியாது என்றார் பாதுகாப்பதிகாரி. தகப்பனோ அதை விட்டு விட்டு வா என்றார். அவனோ கொலைவிழுந்த மாதிரி பயங்கரமாக கத்திக் கொண்டிருந்தான். பாதுகாப்பாளன் எனது விபரங்களைப் பார்த்து என்னை உள்ளே விட்டான். அந்த சிறுவனைக் கடந்த போது அவனின் பார்வை என்னை ஏதோ செய்ய எனது மூளையில் திடீர் என்று ஒரு மின்னல் அடித்தது (வம்ச விருத்தியில் "ஒரு சதம்" என்னும் கதையில் (62ம் பக்கம்) இப்படி ஒரு மின்னலடிக்கிறது).

எனது பேனையை எடுத்து களட்டி உள்ளிருந்த கூர்மையான பகுதியினால் பந்தின் காற்றை அகற்றினேன். குழந்தை பந்தை மகிழ்ச்சியாய் கட்டிக்கொள்ள, தகப்பன் நன்றி என்றார். அண்ணண் வடிவேல் போல் இதெல்லாம் அண்ணணுக்கு சகஜமப்பா போல் புன்னகைத்து, விமானத்தினுள் புகுந்து கொண்டேன். விமானம் நோர்வேயை நோக்கி பறக்கத் தொடங்கியது. மடிக்கணணியை எடுத்து "வம்ச விருத்தியால்" வந்த வினை என்று தலையங்கம் போட்டேன்.



பெருமைமிக்க முத்துலிங்கமய்யாவுக்கு இது சமர்ப்பணம்.
 
 


.

4 comments:

  1. அட்டகாசம்!!!!!!

    வம்சவிருத்தியை வாங்கித்தான் ஆகணும் நான்!

    இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  2. கதையையும், நிகழ்வையும் கலந்து எழுதிய விதம் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  3. லண்டனில் இருப்பதால் வம்சவிருத்தியின் அந்த கதை விளங்கும் என நினைக்கின்றேன், கிளப்பம் சந்தியில் அடிக்கடி உந்தப் பிரச்சனை நடக்கின்றது. அடுத்தமுறை வரும்போது எனக்கு ஒரு மெசேஜ் தாருங்கோ உங்களை எப்படியும் சந்திக்கவேண்டும்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்