நன்றும் தீதும் பிறர் தர வாரா

நேற்று, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 38வது ஆண்டுவிழாவில், நிறைந்த அரங்கத்துடன் மேடையேறி ஒஸ்லோ மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பலத்த பாராட்டையும் பெற்றது "Lankere" என்னும் நகைச்சுவை நாடகம்.

இதில் பங்கேற்ற கலைஞர்கள் மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுக் கொண்டாடப்பட்டார்கள்.

இளையோரின் மனநிலையையும் அவர்களின் சிந்தனையோட்டங்களையும், பெற்றோரின் மனநிலையையும், சிந்தனைப்பாங்கினையும் சமூகத்திலுள்ள சிந்தனைப் பற்றாக்குறையையும் கருப்பொருளாகக் கொண்டது "Lankere" நாடகம். பெற்றோருக்கும் , இளையோருக்கும் இடையிலான புரிந்துணர்வை ஊக்குவிப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

இந் நாடகம் மேடையேறுவதற்கு , மூன்று நான்கு வாரங்களுக்கு முன்னிருந்தே ”இது தேசியத்திற்கு எதிரானது, லங்கர என்னும் கோசத்தை மக்களுக்குள் திணிப்பதற்காக துரோகிகள் தமிழ்ச்சங்கத்தினுள் ஊடுருவி இதனை மேடையேற்றுகிறார்கள் ”,மக்களே சிந்தியுங்கள், துரோகிகளை அடையாளம் காணுங்கள் என்ற ரீதியில் அனைத்து சமூக ஊடகங்களினூடகவும், தொலைபேசிச் செய்திகள் மூலமாகவும் பலத்த பரப்புரையை முடுக்கிவிட்டிருந்தனர் முகம்காட்ட விரும்பாதவர்களின் பிரதிநிதிகள்.

இதற்கு எதிராக சிலரே குரல்கொடுத்திருந்தனர். படைப்பை பார்ப்பதற்கு முன் அதை விமர்சிக்காதீர்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் சிலர் இயக்குனரான சுகிர்தா பஞ்சலிங்கத்தின் வீடுதேடிச்சென்று, அழுத்தம் கொடுத்தமையையும் இங்கு குறிப்பிடுவது அவசியமானது.

நாடகம் மேடையேறுவதை தடுப்பதற்கு இவர்கள் கையாண்ட சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் என்ன என்பதை இயக்குனர் பேசுவதே அதன் பரிமாணத்தையும், அவர் கடந்துகொண்ட சிக்கல்களையும் உணர்த்தும் என நான் கருதுகிறேன்.

அடக்குமுறை மற்றும் உரிமை மீறல்களால் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகம் , வளமான ஜனநாயக சூழலில் வாழ்ந்து கொண்டு படைப்பாளர் ஒருவரின் சுதந்திரத்தை நசுக்க முயலும் சிந்தனைபாங்கை எவ்வாறு நோக்குவது?

நாடகத்தினைப் பார்க்காது, இயக்குனருடன் உரையாடாது ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தும் பரப்புரையை எதுவித சிந்தனையும் இன்றி சமூகஊடகங்களில், கைத்தொலைபேசியூடாக பரப்பிய அனைவரும் தங்களின் செயல்பாடுகள்பற்றிச் சிந்திப்பார்கள் என எதிர்பார்ப்பதைவிட நாம் வேறு என்ன செய்துவிடமுடியும்?

”இப்படியானதொரு சமூகப்பிரக்ஞையற்ற சிந்தனைப் பாங்கினையும் செயற்பாடுகளையுமா” எமது இளையோர்களுக்கு கற்றுக்கொடுக்கப்போகிறோம்?

இதுவா விடுதலைவேண்டிநிற்கும் ஒரு சமூகத்தின் தூர நோக்குப் பார்வை?

இறுதி நாட்களில் மிக முக்கிய கதாபாத்திரம் நாடகத்தில் இருந்து திடீரென்று விலகிக்கொண்டபோது இயக்குனருக்கு ஏற்பட்ட அதிநெருக்கடியான சூழலில் அவர் தனது 13 வயது மகளை குறுகிய காலத்தில் தயார்படுத்தியிருந்தார். அச்சிறுமி ஒரிரு நாட்களே நீடித்த பயிற்சியுடன் மேடையில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பலத்த பாராட்டைப்பெற்றுக்கொண்டது இந்நாடகம்பற்றிய உரையாடலில் மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியதொன்று.

நாடகம் முடிவடைந்தபின் இயக்குனர், இந்நாடகத்திற்கு எதிரான பரப்புரைகளை ஆரம்பித்தவர்களையும், அவற்றை முன்னெடுத்தவர்களையும் நோக்கி முன்வைத்த கேள்வியும் முக்கியமானது.

எனது நாடகம் பற்றிய தவறான கருத்துக்களை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டவர்கள் ஏன் ஒருமுறை கூட என்னிடமோ அல்லது நோர்வே தமிழ்ச் சங்கத்திடமோ இந்நாடகத்தின் உள்ளடக்கம் பற்றி உரையாட முடியாமல் போனது? என்று எழுப்பிய வினாவானது அவர்களைச் சிறிதளவாவது சிந்திக்க வைப்பின் அது வளமான சிந்தனையே.

நாடகத்தின் மூலக்கருவினை இத்தலைப்பு பிரதிபலிக்கின்றது என்பதை நாடகத்தை மேடையில் கண்ணுற்ற பின்பு பார்வையாளர்கள் உணர்ந்தும் புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவர்களின் சம்பாசணைகள் தெளிவாக உணர்த்தியுள்ளன.

இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாடகத்தின் மூலக்கருத்தில் எதுவித சமசரமுமின்றி, முன் வைக்கப்பட்ட விமர்சனத்தைப் பிரதிபலிக்கும் வசனங்களையோ காட்சிகளையோ மாற்றியமைக்காது சவால்களை எதிர்த்து ஒரு நாடகத்தை மேடையேற்றுவது என்பது இலகுவானதல்ல. இதுவே ஒரு உண்மைக் கலைஞர்களின் ஆதார்மார்த்தமான, கலை மீதான பற்றைப் பிரதிபலிப்பதாகும்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்