வாழ்க்கை என்னும் மாயம்


வாழ்க்கை எப்படி நகரப்போகிறது என்பதை, காலம் இரகசியமாக வைத்துக்கொள்கிறது.

வருடத்தில் சில வாரங்களில் எனது மனதும், உடலும், களைத்து ஓய்ந்துவிடும். எதுவும் இயங்காது. மனமும் ஒருவித இருளில் வெளிச்சத்தை தேடியபடியே மிதந்துகொண்டிருக்கும். ஏறத்தாழ கடந்த 10 வருட அனுபவமிது.

இப்படியான நாட்கள் சடப்பொருட்களைப்போன்றவை. வாழும்போதும் கடந்தபின்பும் திரும்பிப்பார்த்தால் அங்கு உயிரிருப்பதில்லை.
இப்படியானதொரு வாரத்தை சில நாட்களுக்குமுன் கடந்துகொண்டேன். சிறு அசைவிற்கே சுருங்கும் தொட்டாச்சிணுங்கிபோல அல்லது அசைவைக் கண்ட ஆமையோல் என்னை உள் இழுத்துக்கொண்டேன். எவரையும் அருகில் அனுமதிக்கவில்லை, நானும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை.

இருபத்திநான்கு மணிநேரத்தில் பெரும் பகுதி படுக்கையில் கழிந்தது. மிகுதி தொலைபேசியைக் கிண்டுவதில் கடந்தது. எனது உலகத்தினுள் தொலைபேசி அழைப்புக்கள்கூட அனுமதிக்கப்படவில்லை.

சிலவேளைகளில் பல பக்கங்கள் வாசித்தபின்தான் புரியும், வாசிப்பில் மனம் லயிக்கவில்லை என்பது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வாசிப்பேன். இப்போதும் வேதாளம் முருக்கையேறியிருக்கும்.

இப்படியான காலத்தை அதன்படியே கடந்துவிடுவதே சிறந்தது என்று அனுபவம் கற்றுத்தந்திருக்கிறது. கருக்கல் வெளிச்சம் ஒளிர்வதுபோன்று இந்தக் கடினமான காலமும் மெதுமெதுவாக மறைந்துபோகும். காலம் இதையும் நிர்ணயித்திருக்கும்.

இப்படியான கருக்கல் வெளிக்கும் ஒருநாள், வானம் நீலமாயும் காற்று வெப்பமாயும் இருந்தது. என்னை வருத்தி வெளியே அழைத்துப்போனேன். நகரத்தின் சாலையோரமாக நடந்துகொண்டிருந்தேன். புத்தனுக்கு ஞானம் தந்த காட்சிகள்போன்று சாலையெங்கும் வாழ்க்கை வியாபித்திருந்தது.

மண்டியிட்டபடி, தலையை நிலத்தில் முட்டுக்கொடுத்தபடியே பிச்சை கேட்ட கிழக்கைரோப்பிய பெண்.

வீதியோரப் பூங்காவில் பதநீர் கதகதப்பில் தன்னை மறந்திருக்கும் இந்நாட்டின் குடிமகன்.
காப்பிக்கடையின் இருக்கையில் இருந்தபடியே கண்மூடி காப்பியை உறுஞ்சும் இளைஞன்

அவ்வப்போது காதலியின் உதட்டினை சுவைக்கும் காதலி. காதலனின் காதலைவிட தன் காதல் அதிகம் என காண்பிக்கும் அவளது அணைப்பு.
நடக்க முடியாது தடுமாறும் துணைவரின் கையைப்பற்றியவாறு மெதுமெதுவாக நடந்துபோகும் வயதான பெண்.

அழகுசாதனக் கடையின் முன் மயங்கிநிற்கும் பதின்மவயதினர்

தனது நாயுடன் உரையாடி, அதனை அணைத்து, அதனை தடவிக்கொடுக்கும் ஒரு மனிதன்.

வீடற்ற ஒரு மனிதனின் வீதியோரத்து வாழ்க்கை.

கறுப்புக்கண்ணாடியுடன் அலட்சியமாக உலகத்தைப் பார்த்தபடியே தனது விலையுயர்ந்த வாகனத்திலேறும் செல்வந்தன்.

வீதியோரத்தில் அநாதரவாய் இறந்து கிடக்கும் பறவை

பேரூந்திற்காய் காத்திருக்கும் மனிதர்கள்

அழுக்கான உடையுடன், தன்னுடன் பெரிதாய் உரையாடியபடியே உலகத்தை பரிகசிக்கும் உளநலமற்ற மனிதன்

பலத்த சிரிப்புடன் கடந்துபோகும் நண்பர்கள் குழாம்

காதலனின் உதட்டினை கவ்வும் சுவைக்கும் காதலி. காதலனின் காதலைவிட தன் காதல் அதிகம் என காண்பிக்கும் அவளது அணைப்பு.

தனது நாயுடன் உரையாடி, அதனை அணைத்து, அதனை தடவிக்கொடுக்கும் ஒரு மனிதன்.

தந்தையின் கையைப்பற்றியபடியே நடைபயிலும் ஒரு குழந்தை. அவள் விழுந்துவிடாதிருக்கவேண்டும் என்று பதைபதைத்துக்கொண்டு அவளுடன் பயணிக்கும் தந்தை.

ஒரு காப்பிக் கடையினுள் உட்கார்த்திருந்தவாறு தேனீரினை உறுஞ்சியபடி கண்ணுற்ற காட்சிகளை, மனது செரித்துக்கொண்டிருந்தது வீதியில் கண்டவர்களுடன் ஒப்பிடும்போது எனதுஎவாழ்க்கை அப்படியொன்றும் மோசமானது அல்ல என்பது ஆறுதலாயிருந்தது.

களைத்திருந்த மனதும் உடலும் சற்று ஆறியிருப்பதாய் உணர்ந்துகொண்டேன். மனதில் நம்பிக்கை துளிர்த்திருந்தது. தூரத்திலிருந்த சூரியனின் மாலைநேரத்து மஞ்சள்;ஒளியும், வெம்மையும் எதையோ உணர்த்திக்கொண்டிருந்தன.











No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்