எதிர்காலமும் இருப்பும்

இலங்கையில் பல கலாச்சாரங்களுடனும் வாழவேண்டிய அவசியம் இல்லை எனலாம். அங்குள்ள சமூக்கட்டமைப்பு அப்படி.

ஆனால் புலத்து வாழ்வியல் அதற்கு நேர் எதிரானது. உலகத்து மக்கட்கூட்டங்கள் அனைவரும் இணைந்துவாழும் சூழலைக் கொண்டது புலத்து வாழ்க்கை.

ஒரு இனம் தனியே வாழ்வதற்கும், பல சமூகங்களுடன் இணைந்து வாழ்வதற்கும் பலத்த வேறுபாடு உண்டல்லவா?

புலத்தில், குறிப்பிட்டவொரு நாட்டிற்கு இடம்பெயர்ந்த அனைவருமே சிறுபான்மையினராகவே இருப்பர். இவர்களுக்கான சவால்கள் பொதுவானவையாகவே இருக்கும். எனவே சிறுபான்மைகள் இணைந்துவாழவேண்டிய நிர்ப்பந்தத்தை சமூகங்களின் இணைந்த வாழ்வின் அவசியமும் ஏற்படுத்துகிறது.

இவ்வாறான சூழ்நிலைகளில் ஏனைய சமூகங்களுடன் நாம் இணைந்து வாழவேண்டும் என்பது இன்றியமையாதது என்பது வெளிப்படை.

நோர்வேயில் தமிழர்கள் குடியேறிய காலப்பகுதியில் வெளிநாட்டவர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் கடந்த 30 ஆண்டுகாலத்தில் ஆபிரிக்கக்கண்டத்தவர்கள், மத்திய கிழக்கு, மேற்காசியச் சமூகங்கள் என்று பல இனமக்கள் நோர்வேயில் குடியேறியுள்ளனர்.

எமது குழந்தைகளும், எதிர்காலச் சந்ததியினரும் விரும்பியோ விரும்பாமலோ பல்கலாச்சார சமூகத்தில் வாழவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை மறுக்க முடியாதல்லவா?

இவ்வாறான ஒரு கூட்டுக்கலாச்சாரத்தில், இணைந்த சமூக வாழ்வில் வாழ்வதுபற்றி எமது குழந்தைகளுக்கு, இளையோருக்கு கற்றுக்கொடுப்பதற்கான தேவையும் அவசியமும் இருப்பதை பற்றி நாம் கவனத்தில் எடுத்துள்ளோமா ?
எத்தனை எத்தனை முற்கற்பிதங்களுடன் நாம் வாழ்கிறோம்?

கறுவல், சோமாலி, சப்பைமூக்கு, கறுவல் களவெடுப்பான். சோனியை நம்பாதே, கிழக்கைரோப்பியன் கள்ளன் என்று எத்தனை எத்தனை அடைமொழிகளுடன், முற்கற்பிதங்களுடன் சக மனிதர்களை நாம் அணுகுகிறோம்?

இப்படியான கற்பிதங்கள் குழந்தைகளின் மனதில் பதிவாவதுடன் அவர்களது சிந்தனையிலும் மனப்பாங்கிலும் கருத்தாக்கங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இவ்வாறான சிந்தனை இணைந்துவாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சமூகத்தினை வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்லுமா என்பதையும் நாம் சிந்திக்கிறோமா?

தமிழர்கள் தமக்குள் சிறப்பாக இணைந்து செயற்படக் கூடியவர்கள். தமக்கென்று விளையாட்டுக் கழகங்கள், ஊர்ச் சங்கங்கள், அமைப்புக்கள், நிறுவனங்கள் என்று பலதையும் செயற்படுத்துகிறார்கள்.

ஆனால் பல்சமூகத்துடன் பல ஆண்டுகளாக வாழத்தொடங்கிவிட்ட எம்மால் ஏனைய சமூகங்களுடன் குறிப்பிடத்தக்களவான இணைந்தசெயற்பாட்டை ஏன் இதுவரை செயற்படுத்தமுடியாதிருக்கிறது?

இதற்கான தடைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதை ஆராயவேண்டிய காலத்தில் நிற்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

கடந்தவாரம் ஒஸ்லோ நகரசபை நடாத்தியதொரு கருத்தரங்கில் பங்குகொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பல்கலாச்சார சமூகமும் சனநாயகமும் என்ற தலைப்பில் பல உரைகளும் கருத்துப்பரிமாற்றங்களும் இடம்பெற்றன.

அவற்றின் சாரமானது பல்கலாச்சாரச் சமூகத்தை பிரதிபலிக்கும் விதமாகவே சமூக நிறுவனங்கள் செயற்படவேண்டும். அவற்றுடன், பெண்கள் மற்றும் இளையோருக்கான பிரதிநிதித்துவம் நிறுவனங்களின் மீதான அரசின் நம்பிக்கையினை பலப்படுத்த உதவும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நோர்வேயில் இயங்கும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களில் பல அரசு வழங்கும் மானியங்களிலேயே தங்கியிருக்கின்றன என்பது பலரும் அறிந்ததே. அங்கத்தவர்களால் கிடைக்கும் சந்தாப்பணத்தை அடிப்படையாகக்கொண்டு பெரிதாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதை அனைவரும் அறிவோம்.

பல்சமூகத்திற்கான செயற்பாடுகளைச் செயற்படுத்தும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு அரசின் மானியங்கள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்கப்படும் என்னும் செய்தி இன்றைய காலத்தில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுகிறது நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டும்.

எனவே தமிழர்களின் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், தமது செயற்பாட்டுத்தளங்களை அகலிக்கும் சிந்தனைக்கு தங்களை உட்படுத்தவேண்டியதொரு நிலைக்கு தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை.

எதிர்காலத்தில் பல்சமூகச் சிந்தனைகள் நோர்வேயின் வாழ்வியலில் முக்கிய இடத்தினைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.

இப்படியானதோர் காலத்திற்கு எம்மையும் எமது இளையோரையும் தயார்படுத்தவேண்டிய பொறுப்பு சமூக முன்னேற்றத்தை விரும்பும் அனைத்து தமிழர்சார் நிறுவனங்களுக்கும் உண்டு.

இன்றைய பல்சமூகச் செயற்பாடுகளில் எமது ஈடுபாடுகளை பிரக்ஞை பூர்வமாக நகர்த்தி, இச் செயற்பாடுளை எம்மவர்கள் நகர்த்தச்செல்வதும், பல்சமூகத்து அரசியலில் நாம் எமது வகிபாகத்தை முன்னெடுப்பதுமே இன்று நாம் செய்யக்கூடிய சமூகச் செயற்பாடாகும்.“

நோர்வே அரசியலில் வெளிநாட்டவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவரும் காலமிது. இதனை புத்திசாலித்தனமாக எமக்கு சாதகமான புலத்து அரசியலுக்கும், தளத்து அரசியலின் நியாயபூர்வமான கோரிக்களுக்கும் பயன்படுத்துவதே எமது நோக்கமாக இருக்கவேண்டும். இதற்கான முன்தயாரிப்புக்களை, முன்னேற்ப்பாடுகளை ஏனைய சமூகங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதை நோர்வே அரசியல் எடுத்துக்காட்டுகிறது.

எனவே எதிர்காலத்திற்கான எமது அரசியற் நகர்வுகளை ஆராய்ந்து அதற்கேற்ற நகர்வுகளை தமிழர்களின் நிறுவனங்கள் நடைமுறைப்படுத்துவதே எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையும்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்