விடைதெரியா வினா

நேற்றிரவு வீடு நோக்கி வந்து கொண்டிருக்கும் போது தொலைபேசியில் வந்த நண்பர் ஒருவர் குமார் அண்ணண் இறந்து விட்டார் என்று துயரம் பகிர்ந்தார். மழையில் நனைந்த உடைகள் போல மனம் கனத்துப் போனது.

ஏறத்தாள 20 வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தேன். நான் பொறுப்பின்றி சுற்றித் திரிந்த காலம். அவரோ ஒரு குழந்தைக்கு தகப்பனாய் குடும்பஸ்தனாய் இருந்தார்.அடிக்கடி அறிவுரைகள் சொல்லுவார். அவற்றை இந்தக் காதால் கேட்டு அந்தக் காதால் விட்டதன் பயனை அனுபவித்திருக்கிறேன்.

அவரின் உயரமும், உடம்பும் அவரை பெரியதொரு மனிதராகக் காட்டினாலும், மனிதர் மிக மிக அமைதியானவர். அமைதியான சுபாவம், அமைதியான நடை. அவர் இருப்பது தெரியாமலே இருக்கும் ஒரு இடத்தில் அவர் இருந்தால்.

நினைவுகளில் அவரின் புன்னகை நிழலாடுகிறது. எப்போதும் எவரையும் சிரித்தமுகத்துடன் எப்படி இருக்கிறீர் என்பார். அவரின் உடல்வாகும் சிரிப்பும் வசீகரமாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் அவரும், அக்காவும் மகனும் கத்தோலிக்க தேவாலயத்திற்கு தவறாமல் சென்று வருவார்கள். இறைபக்தி மிகுந்தவர். பொது விடயங்களிலும் மிக ஆர்வமாக நின்று செயல்படக் கூடியவர்.

இலங்கையில் சர்வேதேச ஹோட்டல் ஒன்றின் முகாமையாளராக பணியாற்றியவர். இங்கும் அமெரிக்க தூதுவராலயத்தில் பணியாற்றியவர். அவரின் பணிவும் ஆர்ப்பாட்டமில்லா தன்மையுமே எனக்கு அவரில் பிடித்தவை.

அவர் கத்தோலிக்கராக இருந்தாலும் எனது திருமணத்தை அவர்கள் வீட்டில் நடாத்தித்தந்தவர். அவரின் மகனை மாப்பிள்ளைத் தோழனாகவும் இருக்க அனுமதித்தவர். திருமணத்தின் போது உனது உற்றார், உறவினர்கள் என பலர் அவர்கள் வீட்டில் தங்கயிருந்த போது சற்றும் முகம் சுளிக்காமல் அவரும், அக்காவும் கவனித்தனுப்பியதை நான் மறத்தலாகாது.

தொழில் நிமித்தம் இடம் பெயர்ந்து போன பின் ஏறத்தாள 18 ஆண்டுகளின் பின் தற்செயலாக சந்தித்தபோது என் பெயரை மறக்காமல் பெயர் சொல்லி அழைத்து ஆச்சர்யப்படுத்தினார். இறுதியாக சந்தித்த போது மிகவும் மெலிந்திருக்கிறீர்கள் என்ற போது குசும்பு கலந்த குரலில் மாப்பிளை மாதிரி என்டு சொல்லும் என்று சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். நம்பமுடியாதிருக்கிறது அவரின் மறைவு.

நேற்று மாலை அவரின் வீடு சென்று அக்கா, அவரின் மகன், உறவினர்களை சந்தித்து திரும்பும் போதும் அவரின் நினைவுகளே என்னைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

அவரின் சுகயீனம் பற்றி அறிந்து ஒரு வாரத்துக்குள் இப்படியாகிவிடும் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அவசர உலகின் வேகத்தில் இறுதியாய் அவரைச் சந்திக்கும்  சந்தர்ப்பத்தை இழந்திருக்கிறேன். காரணம் என்ன? வாழ்வின் வேகத்தில் மனித உணர்வுகளை மதிக்க மறந்திருக்கிறேனோ என எண்ணத் தோன்றுகிறது.


இறந்த பின்பும் ஏதோ என்றை எனக்குணர்த்திப் போயிருக்கிறார் குமார் அண்ணண் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்த முறையாவது அவரின் அறிவுரையை கேட்க வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

எப்போ யாருக்கு என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாதிருக்கிறது. ‌நேற்றிருந்த குமார் அண்ணண் இன்றில்லை. இதே போல் எனக்கும் ஒரு நாள் குறிக்கப்பட்டிருக்கும். அது எப்போ என்பது வாழ்வின் விடைதெரியா வினாக்களில் ஒன்று.

நாளை என்று ஒன்று எனக்கிருந்தால் சந்திப்போம்.

குமார் அண்ணணின் ஆத்மா சாந்தியடைவதாக.

.

1 comment:

  1. நண்பனின் இறப்பு உங்களை சிந்திக்க வைக்கிறது. சிலவற்றை நாம் மறக்கும்போது சில் சம்பவங்கள் எமக்கு வாழ்க்கையை உணர்த்துகின்றன. அண்ணரின் ஆன்மா சாந்தி பெறுக.

    ReplyDelete

பின்னூட்டங்கள்