எரிந்து, கனத்திருக்கும் மனது

 இன்றும் கணணி திருத்தப்போய் சந்தித்த ஒரு மனிதரின் கதையைத் தான் எழுத நினைத்திருக்கிறேன்.

ஒஸ்லோவின் செல்வச்செழிப்புள்ள புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு தொடர்மாடியில் குடியிருந்தார் அப் பெண். ஒப்பந்தம் செய்து கொண்டபடி காலை 10 மணிக்கு அவரின் தொடர்மாடி அழைப்பு மணியை அழுத்தினேன். வீடியோவில் என்னைப் பார்த்து, பின்பு கதவைத் திறந்தார். மூன்றாம் மாடியில் கதவருகே நின்று வரவேற்றார். வயது 70 - 75 இருக்கும்.

வீ்டு மிக நேர்த்தியாக ப‌ழங்கால பொருட்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுவரெங்கும் பெருதும், சிறுதுமாய் கலைச்சித்திரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. மதுபான குடுக்கைகள் ஓரிடத்தில் பலநிறங்களிலும் பல அளவுகளிலும் யாருக்காகவோ காத்திருந்தன.

காட்டப்பட்ட இடத்தில் கணணி இருந்தது. பிரச்சனையை விளக்கினார். நானும் வேலையை தொடங்கியபடியே கதைத்துக்கொண்டிருந்தேன். எமது பேச்சு குடும்பம் பக்கம் திரும்பியது. எனது குழந்தைகள் பற்றிக்கேட்டார். சொன்னேன். பதிலுக்கு நானும கேட்டேன் பலத்த மெளனத்தை பதிலாகத் தந்தார். மனம் எதையோ எச்சரிக்கை செய்ய நானும் மெளனித்திருந்தேன்.

நாம் இருந்த அறை எமது மெளனத்தின் கனத்தை உணர்ந்துகொண்டிருந்தது. நானும் அதையே உணர்ந்தேன். சற்று நேரத்தின் பின் தனக்கு இரு பிள்ளைகள் எனவும் அதில் ஒருவர் என்று சொல்லி மெளனமானார். கண்களைத் துடைத்தவர் தொடந்தார். மூத்தவள் மகள் என்றும் மற்றவர் மகன் என்றார். மகன் ஒஸ்லோவில் வாழ்வதாயும், மகள் என்று சொல்ல வந்தவர் உடைந்த குரலில் பேசக் கஸ்டப்பட்டார். பின்பு மகள் இறந்து விட்டதாகவும் அவரை யாரோ கொலைசெய்து ஒரு குளத்தில் வீசியிருந்ததாகவும் சொல்லிமுடிக்க முதலே கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

மகள் பெரியதொரு நிறுவனத்தில் சிறந்த பதவியில் இருந்ததாகவும். வருடத்தில் அதிகமான நாட்கள் வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருப்பாள் என்றும், அது தன்னை பயங்கொள்ள வைத்ததாயும், அது பற்றி பேசியபோது இனிமேல் தான் சைப்பிரஸ் நாட்டில் ஒரு வருடம் வாழப்போவதாக சொல்லிச் சொன்றவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டதாகவும் சொன்னார். மகளின் மரணத்தை உள்ளூர் போலீசார் தற்கொலை என மூடிமறைத்ததாகவும் ஆனால் பிரேதபரிசோதனை நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் என்பதை மறுதலிக்கிறது என்றும் கொன்னார். லஞ்சம் விளையாடியிருப்பதை தான் நன்கு உணர்வதாயும், குற்றவாளி தண்டிக்கப்படாது தனது மகள் தண்டிக்கப்பட்டிருப்பது எவ்விதத்திலும் நியாயமில்லை என்றார் உடைந்த குரலில்.


குழந்தையின் நிரந்தரப்பிரிவு அவரை பெரிதாய் பாதித்திருந்தது. தனக்குள் ஒரு உலகத்தை உருவாக்கி வாழ்வதாயும், வாழ்க்கையில் பிடிப்பே இல்லை என்றும் சொன்னார். எனக்கு ஏதும் பேச வரவில்லை, எனினும் அவரின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது. மெளனமாய் இருந்திருந்தேன்.

அவரின் கைத்தொலைபேசியில், கணணியில், வீட்டில் பல இடங்களில் மகளின் படங்கள் இருந்தன. கைத்தொலைபேசியில் இருந்த படத்தை மெதுவாய்த் தடவிக் கொடுத்தார்.

வேலைமுடிந்து வெளியேறும் போது எனக்கு எத்தனை வயது என்றார். 45 என்ற போது எனது மகளுக்கும் இந்த வருடம் 45 வயதாகியிருக்கும் அவள் இருந்திருந்தால் என்றார்.

எனக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது ...

இன்றைய நாளும் நல்லதே


.

2 comments:

  1. நண்பா , கதை நன்றாக உள்ளது. வாழ்வில் பலரின் சந்திப்புகள் மறக்கமுடியாது

    ReplyDelete
  2. சிலருடன் பேசும் பொது நம் கண்கள் குளமாகின்றது. மனிதருக்குள் தான் எத்தனை சுமைகள்.
    விரும்பினால் உங்களை எனக்கு அறிமுகபடுதுங்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்