ஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி

நான் கணணி திருத்தப் போகும் பல இடங்களில் எனக்கு பல விதமான மனிதர்களையும் சந்திப்பதால் வித்தியாசம் வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்துப் போகின்றன. இன்றும் அப்படித்தான் கணணி திருத்தப் போயிருந்தேன். வெளியே பனிக்கால குளிர் இலைதுளிர்க் காலத்தின் இளஞ் சூட்டில் சற்றே அடங்கியிருந்தது.  GPS அவரின் வீட்டுக்கு அருகில் வந்ததும் வீடு வந்துவிட்டது என்று அறிவிக்க, அருகில் வாகனத்தை நிறுத்தி அவர் வீடு நோக்கி நடந்தேன். கதவைத் தட்டிய போது வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். ஏறத்தாள 60 - 65 வயதிருக்கும். பரஸ்பர அறிமுகத்தை முடித்த பின், கணணியை பார்க்கத் தொடங்கினேன்

அவரின் கணணிப் பிரச்சனையைப் பார்த்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். இலைதுளிர்க் காலம், இளவெனிற் காலம் என்று எமது உரையாடல் இருந்தது. இம்முறை சென்ற வருடத்தை விட அதிக வெப்பத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினேன். அது பற்றி தனக்குக் கவலையில்லை என்று கூறினார். ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தேன். சிரித்தபடியே ”நான் கிரேக்கத் தீவுகளுக்கு போய்விடுவதால் நோர்வேயின் காலநிலை பற்றி தான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை என்றார்”. எமது பேச்சு வாழ்க்கை, உலக நடப்புகள் சுழன்றுகொண்டிருந்தது.
நான்  கணணிதிருத்துபவன் என்பதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். தனது கணணி இயங்க மறுத்த பின் தனது நண்பியுடன் உரையாடிய போது விசாரித்ததாயும், அப்பொது போது அவர் என்னைப் பற்றிக் கூறி அதன் பின்பு புகழ்ந்து தள்ளினார் என்றும் கூறி, அப்படி அவள் உன்னைப் புகழுமளவுக்கு என்ன செய்தாய் என்றார்?

எனது நினைவுப் பெட்டகத்திலிருந்து இவரின் நண்பி யார் என்பதை கண்டுகொள்ளமுடியாதிருந்தது. யார் உங்கள் நண்பி என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனது நினைவில் அவர் இருக்கவில்லையாதலால் வாயைய் பிதுக்கினேன். நண்பியின் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். ஒரு பொறி தட்டியது. ”ஒம் ஓம் .. அவரின் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதா? என்றேன். ஆம் என்றார்.

ஏறத்தாள 1 வருடத்துக்கு முன்னிருக்கும், ஒரு நாள், இவரின் நண்பி என்னைக் கணணி உதவிக்கு அழைத்தார். குரலிலேயே பதட்டமிருந்தது. உடனே வா என்றார். மாலை வருவதாகக் கூறினேன். மாலை அவரின் வீட்டின் மணியை அழுத்தி எனது வரவை அறிவித்தேன்.  நான்காம் மாடி என்றார். லிப்ட் இல்லாதகட்டடமாகையால் மூச்சிரைத்தபடி நான்கு மாடிகளையும் ஏறி அவரின் வீட்டின் முன் நின்ற போது கதவு ஓட்டைவழியாக என்னைப் பார்த்து, பின்பு கதவுச் சங்கிலியை திறக்காமல் கதவைத் திறந்து என்னை இன்னும் இரண்டுதரம் மேலும் கீழுமாகப் பார்த்தார். நீயா கணணி திருத்துவது என்றார். அவரின் குரலில் பலத்த அவநம்பிக்கை இருந்தது. கறுப்பன் ஒருவனை அவர் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். அதுவும் என்னைப் போன்ற கறுப்பான கறுப்பனை அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். மெதுவாய் நட்புடன் புன்னகைத்தேன்.

ஆம் நான் தான் கணணி திருத்துவது என்றேன். சந்தேகத்துடன் என்னை உள்ளே அனுமதித்தார். நான் உள்ளே நுளைந்ததும் கதைவை தாழ்ப்பாள் இட்டு சங்கிலியையும் மறக்காமல் பூட்டினார். அவரின் பதட்டம் குறைந்ததாய் இல்லை. என்னை சந்தேகத்துடனேயே நடாத்தினார்.

எங்கே இருக்கிறாய்? எந்த நாடு? நோர்வேயில் எத்தனைவருடமாக இருக்கிறாய்? என்ன வேலை செய்கிறாய் என்று கேள்விகளை அடுக்கினார். நானும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று  பதில்களை அடுக்கினேன். சற்று நம்பிக்கை வந்ததும் கணணியைக் காட்டினார். அதனருகில் குந்திக்கொண்டேன். அவரைப் பார்த்து ”என்ன பிரச்சனை என்றேன். ”சிலர் என் கணணியை எனக்குத் தெரியாமல் எனது கணணியினுள் வருகிறார்கள், எனது நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்” என்றார் பதட்டத்துடன்.

எனக்கு தலை சுற்றத் தொடங்கியது. இருந்தாலும் மீண்டும் என்ன என்று கேட்டேன்.

”சிலர் என் கணணியை எனக்குத் தெரியாமல் எனது கணணியினுள் வருகிறார்கள், எனது நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்” என்றார் மிகவும் கண்டிப்பான குரலில்.

அவசரப்பட்டு அது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று சற்று அழுத்தமான குரலில் கேட்டது தப்பாகிவிட்டது. சற்று சினத்துடன் நான் என்ன பொய் சொல்கிறேன் என்கிறாயா? நான் இல்லாத நேரங்களில் கணணிமௌஸ் விருப்பத்திற்கு அலைகிறது. எனது மெயில்  தானே திறந்து மூடுகிறது. எனது ஆவணங்கள் திறந்து மூடுகின்றன. இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? நான் ஒன்றும் முட்டாளில்லை என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. இப்படியான கணணிப் பிரச்சனைகள் எற்படுவது மிக மிகக் குறைவு. வைரஸ் ஏதும் புகுந்திருக்குமா என்று சிந்தனையோடினாலும், அதை மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது. சற்று நேரம் கணணிக்குள் தலையை விட்டு பிரச்சனையை தேடிப்பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. கூகிலாண்டவரும் பதில் தெரியாது, பக்தா என்றார்.

இந்தக் கணணியை நீங்கள் மட்டுமா பாவிக்கிறீர்கள் என்ற கேள்வியை அவரிடம் கேட்டேன். என்னை உற்றுப் பார்த்தவர் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஒரு கதையைச் சொன்னார்.  முன்பு மெதுவாய்ச் சுற்றத் தொடங்கிய தலை இப்போது 100 மைல் வேகத்தில் கண்படி சுற்றத்தொடங்கியது.

அவரின் கதையைக் கேட்டு அதன் பின் அவரின் வீட்டை விட்டு நான் வெளியே வர ஐந்து மணிநேரம் எடுத்தது. அவரின் கதையின் சாரம் இது தான்.

அவர் சுகயீனம் காரணமாக தொழில் செய்ய முடியாததனால் சுகயீன ஓய்வு பெற்றவர். தனியே வாழ்பவர். அடிக்கடி கிரேக்கத்தீவுகளுக்கு வெக்கையை அனுபவிப்பதற்றகாகவும், சுகயீனத்தை தவிர்க்கும் பொருட்டும் பயணிப்பவர். அப்படி அவர் அங்கு பயணப்பட்ட நாட்களில் அங்கு ஒரு குடும்பத்தினர் நன்கு அறிமுகமாயிருந்ததனால் அவர்களுக்கு இவர் சில உதவிகளைப் புரிந்துள்ளார். அந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு மனிதர் 40 வயதிருக்கும் நோர்வேயில் வேலை‌ தேடி வந்திருக்கிறார். இவரும் தான் தனியே இருப்பதால் அவரை தன்னுடன் தங்கியிருக்க அனுமதித்திருக்கிறார். ஆரம்பத்தில் பிரச்சனையின்றிப் போயிருக்கிறது.

இந்தப் பெண்ணிண் வருமானம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. கிரேக்கப் பயணங்களைக் கூட அவருக்கு சுகயீனம் என்பதால் அரசாங்கமே ஒழுங்கு செய்து வந்தது. இவரின் வீட்டில் தங்கிய மனிதர் எதுவித ‌பண உதவியையும் இவருக்குச் செய்யாமல் தன்னிஸ்டப்படி  அவரின் வீட்டில் ஏறத்தாள 4 - 5 மாதங்கள் வாழ்ந்திருக்கிறார். இவரின் சேமிப்பும் கரைந்திருக்கிறது. ‌இவரால் அம்மனிதனை வெளியேறு என்று கூறமுடியாதிருந்திருக்கிறது.

இதற்கிடையில் அம் மனிதரின் அடாவடித்தனங்கள் அதிகரித்து, இவரின் கணணியை பாவிப்பது.  தொலைபேசியை பாவிப்பது என்று எல்லைகளை மீறியபடியே இருந்திருக்கிறார் அம் மனிதர். இவர் வயதானவர். எதையும் எதிர்க்கும் துணிவின்றி பயம் காரணமாக அமைதியாய் இருந்திருக்கிறார். ஒரு நாள் இவர் சமைக்கவில்லை என்ற கோபத்தில் அம் மனிதர் பெரிதாய் சத்தம் போட்டு அமர்க்களம் செய்த போது பயந்து போன இவர் சற்றுத் துணிவை வரவழைத்தபடியே வெளியே போ என்றிருக்கிறார்.
அன்று தொடக்கம் இவரை வெருட்டியபடியே அவ் வீட்டில் அம்மனிதன் வாழ்ந்திருக்கிறான். கணணி, தொலைபேசி  ஆகியவற்றை அம் மனிதனே பாவித்திருக்கிறான். இவரைப் பாவிக்க அனுமதிக்கவில்லை. இவரும் தொடை எலும்பு அறுவைச்சிகிச்சை செய்திருந்ததால் அதிகம் வெளியே செல்ல முடியாதிருந்திருக்கிறார். அம் மனிதனே தேவையான பொருட்களை இவரின் பணத்தில் வாங்கிவர இவர் சமைத்துக்கொடுத்திருக்கிறார்

தொல்லை தாங்க முடியாத நாட்களில் ஒரு நாள், அம் மனிதன் பயணம் சென்றிருந்த போது வீட்டுக்கதவுக்கான பூட்டை அருகில் இருந்த பூட்டுக்கடையின் உதவியுடன் மாற்றியிருக்கிறார். அத்துடன் அம் மனிதனி்ன்உடமைகளையும் வீட்டுக்கு வெளியே வைத்திருக்கிறார்.

ஓரிரு நாட்களில் திரும்பி வந்த அம் மனிதன் சினமுற்று  இம்சை செய்த போது வேறு பலர் அவனைக்கலைத்திருக்கிறார்கள். அதன் பின் அவன் அங்கு வருவதில்லை. ஆனால் இவரின் கணணி இணையத்துடன் தொடர்பு உள்ள நேரங்களில் தன்னிச்சையாக இயங்க ஆரம்பித்திருக்கிறது.

இவரின் இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு கணணி தானே இயங்கும் மர்மம் புரிந்தது. தொலைவில் இருந்து கணணியை இயக்கும் மென் பொருள் இருக்கிறதா என்று பார்த்தேன். பிரபல்யமான ஒரு மென்பொருள் இருந்தது. அதன் இரகசியச்சொல்லும் அடிக்கடி மாறாதாவாறு செய்யப்பட்டிருந்தது.

அவருக்கு பிரச்சனையை விளக்கிக் கூறினேன். கணணியை தூக்கி எறி ‌என்னும் தொனியில் பேசினார். அதற்கு அவசியம் இல்லை  என்று கூறி அக் கணணியை மீண்டும் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன்.

தேனீர், பிஸ்கட், பழங்கள் என்று பெரும் உபசாரம் நடாத்தினார்.  ஒரு கரிய கறுப்பனும் ஒரு வௌளை மூதாட்டியும் அங்கு நண்பர்களாகியிருந்தனர். கேட்ட தொகையை விட 100 குறோணர்கள் அதிகமாகவும்  தந்தார். நன்றி கூறிப் புறப்பட்டேன்.

அதன் பின் சிறு சிறு பிரச்சனைகளுக்காக என்னை அழைத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும்  அம் மனிதனைப் பற்றிப் பேசுவார். தனக்கு பயமாய் இருப்பதால் மிகவும் கவனமாகவே இருப்புதாகவும், இருட்டிய பின் வெளியே செல்வதில்லை என்றும் கூறினார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது. வயது முதிர்ந்த காலத்தில், தனியே பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்தார். குடும்பத்தவர் என்று குறிப்பிடத்தக்க வகையில் எவருமில்லை. எனவே தனிமையில் தான் அவரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியாக அவரைச் சந்தித்த போது நல்லவர்களையே கடவுள் சோதிப்பார் என்று நாம் தமிழில் கூறுவதுண்டு என்றேன் நான். சிரித்தார். தற்போதும் அம் மனிதனின் குடும்பத்தவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வதாகச் சொன்ன போது எனக்கு ‌ அவர் மீது சற்று கோபம் வந்தது. உங்களுக்குப் பைத்தியம் என்றேன். என்னைப் பார்த்துச் சிரித்தார். அச் சிரிப்பு, அவரளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை உணர்த்திப் போயிற்று.

”ஆற்றைக் கடந்த ஞானியும், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த தேளும்” கதை தெரிந்தவர்களுக்கு  அந்த மூதாட்டியின் செயல் நன்கு புரியும்.

மனிதர்கள் பலவிதம். இவரைப் போன்றவர்களாலேயே உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.


இன்றைய நாளும் நல்லதே.

5 comments:

  1. வயதானபின் தனிமை என்பது... நினைததுப் பார்க்கவே முடியவில்லை.

    ReplyDelete
  2. நல்லதோர் பதிவு...........

    ReplyDelete
  3. வெளிநாட்டு வாழ்வில் வேறுபட்ட விடயங்களை சுவையாக சொல்லி மனித மனங்களின் நிலையை விளக்கியிருக்கும் பதிவு .

    ReplyDelete
  4. மீண்டும் ஒரு நல்ல பதிவு

    ReplyDelete

பின்னூட்டங்கள்