மணற்குளிப்பு

இன்று வெய்யில். ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டிடத்தைக் கடந்தபோது நீண்ட தலைமுடியுடைய சின்னஞ்சிறு சிறுமியொருத்தி தோழியொருத்தியுடன் மணல் குளித்துக்கொண்டிருந்தாள்.
இருவரையும் நீராட்டப்போகும் தகப்பன்களை நினைத்துப் பார்த்தேன்.
பெரு வாழ்வு வாழ்கிறார்கள் அவர்கள்.
இருவரையும் வீட்டுக்கு அழைப்பதே பெரும்பாடு.
அப்புறமாய் நீராட்ட அழைப்பது அதைவிட பெரும்பாடு.
இதற்கிடையில் இவர்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
தலையில் உள்ள மண்ணை முதலில் அகற்ற முயலவேண்டும். இங்கு ஆரம்பிக்கும் சண்டை.
சீப்பை எடுத்து மணலை அகற்ற முயலும்போது தூங்கிவிழுவார்கள்.
அப்பனுக்கு திட்டுவிழும். அடியும்தான்.
கெஞ்சிக்கூத்தாடி பேன் இழுக்கும் சீப்பால் மணலை முழுவதுமாய் அகற்றி முடியும்போது ஒருமணி நேரம் கடந்திருக்கும்.
முழுகவைத்து, தலைமுடியினை காயவைத்துப் படுக்கைக்கு அழைத்துப்போகும்போது அவளது தூக்கம் கலைந்து. அப்பனுடன் ஆடிப்பாடியபின் களைத்து மார்பில் உறங்கி மறுநாள் எழும்பும்போது அப்பனின் மார்பிலும் தலையணையெங்கும் மணலாயிருக்கும்.
மீண்டும் சீப்பைக் கையிலெடுக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்