நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

நோர்வேயின் பட்மின்டன் விளையாட்டுக்கான பாராளுமன்றக் கூட்டம் என்று கருதப்படும் சந்திப்பில் உட்கார்ந்திருக்கிறேன்.
வெளியே கடும் வெய்யில். எனவே சாரளங்களை மூடிவிட்டிருக்கிறார்கள்.
எனக்கு முன்னே உள்ள இருக்கையில் ஒரு வயதான பெரியவர் இருக்கிறார். வெய்யிலுக்கு ஏற்றவாறு காற்சட்டை, டீ சேட் உடன் ரகுவரனின் உயரத்தில் அவர் நடக்கும்போது இராணுவ அதிகாரிபோன்று தோன்றுகிறார். அடிக்கடி தேனீர் குடிக்கிறார். பழங்களை விழுங்குகிறார் கிடைக்கும் உணவுகளை வயிற்றினுள் எதுவித சங்கடமுமின்றி இறக்கிக்கொள்கிறார். அடிக்கடி எனது தலையைப்போன்ற அவரது தலையைச் சொறிந்தும்கொள்கிறார்.
அடிக்கடி கதிரையை சற்று பின்னே தள்ளி வசதியாக இருக்கிறார். அவர் கதிரையைத் தள்ளும்போதெல்லாம் எனக்கு அருகில் வருவது தவிர்க்கமுடியாததாகிறது.
இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.
ஆனால் 5 நிமிடத்திற்கு ஒருதடவை வலது பக்கமாக சரிந்து இடது பிட்டத்தை உயர்த்தி ...... பிர்ர்ர்ர்ர் என்ற பேரோலியுடன் காற்றை அசுத்துப்படுத்துகிறார். நேரே பின்னால் இருக்கும் இந்த அப்பாவியின் முகத்திலடிக்கிறது அக்காற்றும் அதன் வாசனையும்.
இதையும் தாங்கிக்கொள்ளலாம்.
பிட்டத்தை மீண்டும் கதிரைையில் பாதுகாப்பாக வைத்து சமப்படுத்திக்கொண்டபின், மெதுவாய் என்பக்கமாய்த் திரும்பி “தெய்வீகமாய் புன்னகைத்து, கண்ணைச் சிமிட்டுவதைத்”தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது.
பாவி போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியாயுமாய் இருக்கிறதே.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்