தொழில் பக்தியும் முக்தியும்

 இன்று வலை மேய்ந்த போது கண்ணில் பட்டது ”வேலைத்தளங்களில் வேலையை மட்டும் செய்கிறார்களா?” என்னும் பதிவு. அதன் விளைவாக எனது தொழில் இடங்களில் நடந்த சில சம்பவங்களை பகிர்வோம் என நினைத்ததன் விளைவு தான் நீங்கள் வாசிப்பது.

ஊரில் எனது ஞாபகத்தில் இருக்கும் மனிதர் இவர். இவர் என்னுடன் வேலை செய்யவில்லை. ஆனால் அவர் ஒரு இடத்தில் வேலை செய்தார். அப்போ நான் பாடசாலை மாணவன்.  கறள்கட்டிய சைக்கிலில் வருவார். சுருட்டுடன் திரிவார். கிட்டப் போய் கதைத்தால் காலையில் குடித்த சோமபானத்தின் மணம் கமளும். எது செய்ய வேண்டுமென்றாலும் ஒரு பிளேன் டீ வாங்கிக் கொடுக்க வேண்டும். அதிகாரிகளின்  எடு பிடி வேலைகளையும் வேறு சிறு சிறு வேலைகளையும் செய்வார். ஆனால் அரசாங்கம் சம்பளம் கொடுத்தது. ஊருக்குப் போன போது சந்தித்தேன். வயதாகி ஓடுங்கிப் போயிருந்தார். கண்டதும் பெயர் சொல்லி அழைத்து ஆச்சர்யப்படுத்தினார். அப்பவும் சோமபானத்தின் மணம் கசிந்து கொண்டிருந்தது. வாழ்க எங்கள் ........ அண்ணண்.

அடுத்தவர் என்னுடன் வேலை செய்தவர். ஒரு நோர்வேஜிய நாட்டுப் பிரஜை. அவரின் பிரச்சனை என்னவென்றால்  எமது வேலைத்தளம் தனக்குச் சொந்தமானது என்று நினைப்பது தான். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. 1970களில் எனது நண்பரின் தகப்பனார் பொருளாதாரச் சிக்கலினால் தனது நிறுவனத்தை ஒருவருக்கு விற்றாராம். அவரின் தகப்பன் விற்றது எங்களின் நிறுவனத்தை. வாங்கியது இப்போதைய உரிமையாளர். ஆனால் எனது நண்பர் மட்டும் தகப்பனின் முன்னை நாள் சொத்தை இப்பவும் உரிமை கொண்டாடுவது போல கதை விடுவார். அதை அப்படி இப்படி மாற்றம் செய்‌ய வேண்டும் என்பார். அதை பெரிதாய் விவாதிக்கவும் செய்வார். பழைய விசுவாசத்திற்காக உரிமையாளர்கள் இவரை பொறுத்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம். தற்போது ஓய்வு பெற்று வாழ்கிறார்.

நேர்வேக்கு வந்த ஆரம்ப வருடங்களில் ஒரு விடுதியில் (hotel) இல் வேலை செய்தேன். விடுதியின் பொறுப்பாளருக்கு 2 சிறிய கடைகள் இருந்தன. சில நாட்களின் பின் பொறுப்பாளரின் அறைக்கு அழைக்கப்பட்டு நாளை முதல் அவரின் கடையில் என்னை தொழில் புரியக் கேட்டார். தலையாட்டினேன். காலையில் 6 -9 மணிவரை கடையில் வேலை பின்பு 9 -16 மணி வரை விடுதியில் வேலை. கடையில் இருந்து விடுதிக்கு வர 30  நிமிடங்கள் எடுக்கும். ஆனால் பொறுப்பாளர்  அதை கண்டு கொள்ள மாட்டார். அதாவது எனக்கு 30 நிமிட சம்பளம் இலவசம். கடையில் காலையில் நான் நிற்கும் போது ஒரு வயதான பெண்ணும் நிற்பார். பலவிதமான பொறுட்கள் வாகனத்தில் வரும். வாகனத்தை அந்த பொறுப்பாளரே செலுத்தினார்.  திடீர் என பொறுப்பாளரை வேலையில் இருந்து நிறுத்தினார்கள். எனக்கு பாவமாய் இருந்தது. அதன் பின்பான ஒரு நாளில் எமது பொறுப்பாளர் விடுதிக்கு என்று பொறுட்களை வாங்கி தனது கடையில் வைத்து விற்பனை செய்ததனாலேயே வேலை நிறுத்தம் செய்யப்பட்டார் என அறிந்தேன். அதற்குப் பின்னான சில வாரங்கள் எனக்கு இலவசமாக வந்த 30 நிமிடச் சம்பளம் நின்று போனது.

நான் கணணித்துறையில் தொழில் செய்திருந்த ஒரு நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக ஒருவர் இருந்தார். மனிதர் எனக்கு நல்லவராய் தெரிந்தாலும் மற்றவர்களுக்கு ஒரு அடாவடியான மனிதனாயே தெரிந்தார். அவரை பலரும் வெறுத்தார்கள். அவரும் அதை அறிந்திருந்தார். அந்த நாட்களில் "I Love You" என்றும் வைரஸ் ஒன்று வெளி வந்தது. அது ஒரு மின்னஞ்சலின் இணைப்பாக வந்து மற்றவர்களுக்குப் பரவும். எனது மேலதிகாரிக்கும் ஒரு மின்னஞ்சலில் அது வந்திருக்கிறது. அவருக்கும் காதல் ஆசை வர, அவர் அதை கிளிக் பண்ண, எமது நிறுவனத்துக்குள் புகுந்தது அந்த வைரஸ். சில நிமிடங்களில் எமது நிறுவனம் செயலிழந்தது. அதற்கிடையில் அவராகவே தனது பிழையை உணர்ந்து என்னிடம் வந்து நிலமையை விளக்கினார். பிரிதாபமாக கெஞ்சும் குரலில் பரிகாரமும் கேட்டார். அவரின் பெயரை வெளிவிடாமல் அடக்கி வாசித்து பிரச்சனையை இரண்டு நாட்களின் பின் தீர்த்துக் கொண்டோம்.அதன் பின் அவர் எனக்கு பல சலுகைகள் தந்தது வேறு கதை.

அதே நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக வந்தார் இன்னொருவர். அவரின் இம்சையோ வித்தியாசமானது. அவரின் தொழில் கணணித்துறையை நிர்வகிப்பதுடன் நிதித் துறைக்கு பொறுப்பாகவும் இருந்தார். கணணித் துறையில் முக்கிய முடிவுகளை எடுப்பார். நான் மிகுதியை கவனித்துக் கொண்டேன். ஆனால் இந்த மனிதருக்கு புதிய புதிய செல்லிட தொலைபேசிகளிலும் (Mobile Phone) புதிய புதிய  கணணிகளிலும் தீராக் காதல் இருந்தது. ஏறத்தாள மாதத்திற்கு ஒரு செல்லிட தொலைபேசியும், கணணியும் அவருக்குத் தேவை. எவ்வித தலைபோகும் முக்கிய வேலை இருந்தாலும் அவர் தனது கணணியையும் செல்லிட தொலைபேசியையும் தலைபோகும் பிரச்சனையாக்கிவிடுவார். நானும் மேலதிகாரியை பகைப்பான் ஏன் என்று அடக்கியே வாசித்தேன். ஆனால் அவரிடம், உங்களுக்கு புதிய புதிய கணணியும் செல்லிடதொலைுபேசியும் தர முதல் நான் அவற்றை பரிசீலனை செய்து பார்த்தபின்பே தருவேன் என்றேன். எதிர்ப்பின்றி நீ சொல்வது நியாயம் என்றார்.  அந்த நிறுவனத்தில் தொழில் புரிந்த கடைசி 4 -5 வருடங்களும் எனது கையில் மாதத்துக்கு ஒரு புதிய செல்லிட தொலைபேசியும், சந்தைக்கு வந்து புதிய கணணிகளும் தாராளமாய்ப் புழங்கின. பலருக்கு நான் புதிய செல்லிடபேசிகளுடன் திரிந்ததற்கான காரணம் இப்போது விளங்கக் கூடும். எனவே அவை எல்லாம் எனது சொந்தப் பணத்தில் வாங்கியதாக  அவர்கள் நினைத்திருக்கக்கலாம்.  அதற்கு நான் பொறுப்பாக முடியாது. இப்போ ஒன்றரை வருடமாய் ஒரு செல்லிட தொலைபேசியுடன் அலைகிறேன்.

இன்‌னுமொரு இடத்தில் கொள்வனவுத் துறை அதிகாரியாக ஒருவர் இருந்தார். மனிதரின் வாழ்க்கையின் இலட்சியம்  கோப்பி குடிக்கும் ”கப்”கள் சேகரிப்பது. அதனிலும் முக்கியம் அந்த ”கப்” இல் ஏதாவது ஒரு நிறுவனத்திக் இலட்சனை இருக்க வேண்டுமென்பது. எங்கு சென்றாலும் அவரின் முக்கிய இலக்காக இவைகளே இருக்கும்.  விற்பனைக் கண்காட்சிகளுக்கு சென்றால் மனிதர் ஒரு பெட்டி நிறைய  ”கப்” களுடன் வருவார். அவரின் கந்தோரினுள் பல நூற்றுக் கணக்கில் கோப்பி  ”கப்” கள் இருந்தன. அழகாக அடுக்கி வைப்பார்.  மாதத்தில் இரு நாட்கள் அவற்றை தூசு தட்டி மீண்டும் அழகாக அடுக்குவார். அதுவும் வேலை நேரத்திலேயே. எமது நிறுவனத்தின் உரிமையாளரின் மிக நெருங்கிய நண்பர் என்பதால் அவர் தனது பொழுது போக்கை வேலையுடன் செய்து வந்தார். தட்டிக் கேட்பதற்கு எவருக்கும் ”தில்” இருக்கவில்லை. அதனால் அவர் ”தில்”லுடன் திரிந்தார்.

இது இப்படியாயிருக்க எனது நண்பரின்  நண்பரொருவர் சுத்தத் தமிழர். அவர் காட்டிய கூத்து பெரீய கூத்து. அவரின் தொழிட்சாலையில் அவருக்கு  கஸ்டப்பட்டு வேலை செய்பவர் என்னும் பெயர் இருந்தது.  எனவே அவர் பெயரும் புகழுடனும் வாழ்ந்திருந்தார், தொழிட்சாலையில். திடீர் என அவரை தொழிட்சாலையால் நீக்கியதாக் கூறினார்கள். காரணம் அறியக் கிடைத்தது. மனிதருக்கு ஆள் அரவமில்லாத இடங்களில் புகுந்து போய் குந்தியிருந்து வெல்டிங் செய்யும்  வேலை. அன்றும் அப்படித்தான் வேலை செய்திருக்கிறார். அவரின் கஸ்டகாலம் அவரின் மேலதிகாரி அவர் வேலை செய்யுமிடத்திற்கு வந்த போது பெருஞ்சத்தமாய் குறட்டைஒலி கேட்டிருக்கிறது. அதுவே அவரின் வேலைக்கு ஆப்பு வைத்தது. இதை வைத்து அவரின் நண்பர்கள் அவரை பண்ணிய கேலி.. அப்பப்பா... கொடுமையிலும் கொடுமை அது.

இப்படி பல கதைகள். என்னைப் பற்றியும் யாரும் எழுதக் கூடும். ஒரு பிரின்டருக்கு 2 மணிநேரமாக மின்சாரம் கொடுக்காமல் அதைத் திருத்திய பேரறிஞனல்லவா நான்.



.


1 comment:

  1. வேலைதள அன்பர்கள் (நண்பர்கள் என்றும் சொல்ல முடியவில்லை) சங்கதிகள் சுவையாக இருந்தன்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்