பூவினும் மென்மையான மனிதன்

சிந்துவெளி -மெசப்பெத்தேமியா  நாகரீக நாட்டவர் (ஒருவரின் கணணி திருத்த வேலையாய் அவர் வீடு போயிருந்தேன். அங்கு சந்தித்த ஒருவரைப்பற்றிய கதைதான் இது.

ஈராக் நாட்டு நண்பர் முகம் நிறைந்த புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்றார். வீடு அமைதியாயும், அழாகாயும் இருந்தது. வெளியில் மழை அடித்து ஊத்திக்கொண்டிருந்தது.

கணணியின் பிரச்சனை பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் போது கோட், சூட் போட்டு பெரியதொரு பில்ட்அப் கொடுத்தபடி வந்தமர்ந்தார் இந்தக் கதையின் கதாநாயகன். கைகுலுக்கி அறிமுகமானோம். மிகவும் இலகுவாய் சம்பிரதாயங்கள் இன்றி அவருடன் பழகமுடிந்தது. தலையில் மயிர் என்ற சொல்லுக்கே இடமிருக்கவில்லை, அவரிடம். நமக்கும் அப்படித்தான். அதுதான் நண்பர்களாயினோமோ?

அசாத்தியமானதோர் அமைதியிருந்தது அவர் முகத்தில். மனிதரிடம் குசும்பும், லொள்ளும் தேவைக்கு அதிகமாகவே குடியிருந்தது. மிகவும் கலகலப்பான மனிதராயிருந்தார்.

ஒஸ்லோ மாநகரத்துக்கு வெளியே 150 கி.மீ அப்பால் வசிக்கிறாராம். 18 வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்தவராம். குடும்பம் இன்னும் பக்தாத் மாநகரத்தில் இருக்கிறதாம். தன் மனைவி மிக அழகானவளாம் (பக்தாத் பேரழகி என்பது அவராயிருக்குமோ?) குழந்தைகளும் அங்கு தான் வசிக்கிறார்களாம் என்றார்.

ஏன் குடும்பத்தை அழைக்கவில்லை என்ற போது, அவர்கள் ஊரில் வாழ்வது தான்  சிறந்தது என்று சொல்லி சற்று மெளனித்தவர்.. தொடர்ந்தார் இப்படி: இந்நாட்டு வாழ்க்கைமுறைகள் தனக்கு ஒவ்வாமல் இருப்பதாயும், வெளிநாட்டுப் பெண்கள் இந்நாட்டு சுதந்திரத்தை தவறாக புரிந்துகொள்வதால் குடும்பங்களுக்கிடையில் ஆயிரம் பிரச்சனைகள் என்றார். தவிர தனது பெற்றோர், மனைவியின் பெற்றோர் ஆகியோருடன் தனது குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்கிறது என்றார்.

அவரைப்பார்த்தால் குடும்பத்தை அடக்கியாள்பவர் போல் தெரியவில்லை. அவரிடம் கேட்ட வேண்டும் என்று நினைத்த கேள்விகளைக் கூட என்னால் கேட்கமுடியவில்லை. சற்று நேரம் கனத்த மௌனம் நிலவியது.

கணணி திருத்துவதா உன் தொழில் என்றார் என்னைப்பார்த்து. இல்லை இது சைட் பிஸ்னஸ் என்ற போது.. வடிவேலு மாதிரி ஆகா... என்றார். உங்கள் தொழில் என்ன என்றேன். சற்று யோசித்தவர் தனது நண்பரைப்பார்த்து அரபிமொழியில் ஏதோ சொல்லிச் சிரித்தார். பின்பு என்னைப் பார்த்து என்னைப் பார்த்தால் என்ன தொழில் செய்பவன் மாதிரி இருக்கிறது என்றார்?

நானும் அவரின் நோர்ஜிய மொழியறிவு, நடை, உடை, பாவனை ஆகியவற்றைப் பார்த்து நீங்கள் ஒரு வைத்தியர் என்றேன். வீடே அதிரும்படியாக விழுந்து விழுந்து சிரித்தனர் நண்பர்கள் இருவரும். நானும் அசட்டுச் சிரிப்பொன்றை சிரித்து வைத்தேன்.

நான் வைத்தியன் தான் ஆனால் மனிதர்களுக்கோ, மிருகங்களுக்கோ அல்ல என்றார். அப்ப யாருக்கு? என்ற போது பூமரங்களுக்கு என்றார். தான் ஒரு கார்ட்னர் (gartner) என்று சொல்லி, மனிதர்களின் உடைக்கும் தொழிலுக்கும் தொடர்பில்லை நண்பா என்று ஒரு தத்துவத்தையும் உதிர்த்தார்.

தன் வீடு ஒரு பூந்தோட்டம் என்றும். தனது காலைப் பொழுதுகள் இந்த பூமரங்களுடனேயே கழிவதாயும், தனக்கு பூமரங்களின் மொழிபுரியும் என்றும் அவையே தனது நண்பர்கள் என்றும் தொடங்கி, பூமரங்கள் பற்றி ஒரு சிறிய லெக்கசுரும் தந்தார்.  நீ கட்டாயம் பூ மரம் வளர்க்கவேண்டும் என்றும் அது என் வாழ்வை அழகாக்கும் என்றும் சொன்னார். சரி என்று தலையாட்டினேன். எனது மகளை நான் பூக்குட்டி என்றே அழைப்பேன் என்ற போது ஏதொ புரிந்தது போல் ஆழமான புன்னகையை பரிசாகத் தந்தார்.

நான் சற்று கணணியில் மூழ்கி திரும்பிய போது நண்பரின் பூமரங்கள் வாடியிருந்தால் அவற்றிற்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். நண்பரிடம் ஏதோ அரபி மொழியில் கதைத்துக் கொண்டிருந்தார் (நண்பரை திட்டியிருப்பார் என்று தான் நினைக்கிறேன்)

ஒரு பூமரம் வாடியிருந்தது
அதை எடுத்து வந்தார்
நிலத்தில் பேப்பர் விரித்தார்
தனது கோட்ஐ களட்டி வைத்தார்
சப்பாணிகொட்டி உட்கார்ந்தார்
நண்பரை கத்தி கொணரப் பணித்தார்
குழந்தையை தூக்கி எடுப்பது போல்
மிக அவதானமாய் பூச்சட்டியில் இருந்து
பூங்கன்றினை பிரித்தெடுத்து
புதிய சாடியினுள்
மண்வைத்து
பின்பு
பூங்கன்றை வைத்து
மெதுவாய் பூங்கன்றுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
சற்று நீர் ஊற்றி
யன்னலருகில் வைத்தார்
குனிந்து பூக்களை முத்தமிட்டார்
இலைகளைத் தடவிக்கொடுத்தார்

பூமரங்களை இவ்வளவு புனிதமாய் பார்க்கும் இந்த மனிதரைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. நேசமுள்ள மனிதர்கள் என்பது இவரைப் போன்றவர்களையா? அப்படியெனின் என்னில் நேசமில்லை என்றே நினைக்கிறேன்.

நண்பரின் பூமரங்களில் தன்னிடம் இல்லாதவை என்று கண்டவற்றில் பதியம் வைப்பதற்காய் சிலவற்றை எடுத்து கொண்டு விடைபெற்றார் சிந்துவெளி - மெசப்பெத்தேமியா நாகரீக நாட்டு நண்பர்.

இன்றைய நாளும் நல்லதே


.

1 comment:

  1. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.....வடலூர் வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்