விசரன் ஓட்டிய கார்


தலையங்கம் பார்த்து ஏதும் திரில்ஆன விடயம் என்று நீங்கள் வந்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்.

நான் கார் ஓட்டுவதற்குப் பழகிய கதையைத்தான் எழுத நினைத்திருக்கிறேன், இன்று. உனக்கு உண்மையில விசர் தான் என்று நீங்கள் திட்டலாம்.  அண்ணணுக்கு இதெல்லாம் சகஜமப்பா.

1994ம் ஆண்டு வடமேற்கு நோர்வேயில் வாழ்திருந்த காலமது. அந்த ஊரில் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. கார் இருந்தால் தான் சமாளிக்கலாம்.  காலை, மதியம், இரவு என்று வைத்தியர் மருந்து தரவது போலவே அங்கு பேரூந்து ஓடியது.

வீட்டில் ஆலோசனை மகாநாடு நடந்தது. நான் கார் ஒடப் பழகுவது என்றும் அதுவும் நாளையில் இருந்து என்றும், பணத்தையும் நானே செலுத்தவேண்டும் என்று அவர்களே தீர்மானமெடுத்து, எனக்கு அறிவித்தார்கள். சர்வதிகாரியை எதிர்க்கும் திரானி அந்தக்காலத்தில் என்னிடம் இருக்கவில்லை. எனவே தலையை ஆட்டினேன்.

கார் பழகுவது என்றால் சில சிக்கல்கள் இருந்தன.
முதலாவது ஒரு கார் இருக்க வேண்டும். அதன் பின் ஆசிரியர் வேண்டும் அதுவும் ஆசிரியர் 5 வருடங்களாக சாரதிப்பத்திரம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.மூன்றாவது சனநடமாட்டமில்லாத இடமாக இருக்க வேண்டும்.
நான்காவது  சாரதிப்பயிட்சி பாடசாலையில் தியரி படிக்க வேண்டும்.

இப்படி பல சிக்கல்கள் இருந்தாலும் எனக்கு இருந்த பெரிய பிரச்சனை கார். எங்கள் பரம்பரையிலேயே கார் இருந்ததில்லை. என்னிடம் மட்டும் இருக்குமா என்ன? தவிர, என்னை நம்பி தங்கள் காரை தருமளவுக்கு எனது நண்பர்கள் முட்டாள்களும் இல்லை.

இந்த நேரத்தில்தான், தற்பொது பரலோகத்தில் வசிக்கும் நண்பர் சிவா எனக்கு கார் வாங்கும் பணியை ஏற்றுக் கொண்டார். சிவா மிகச் சிறந்த சாரதி. இலங்கையில் இருந்து வரும்போதே வாகனம் ஓட்டத் தெரிந்தது அவருக்கு. அவர் இயக்கம் ஒன்றிற்கு வாகனம் ஓடியவர். அவர் 7 வருடங்களாக சாரதிப் பத்திரம் வைத்திருந்தார். அதைவிட வாகனம் பற்றி ஆதியில் இருந்து அந்தம்வரை அவருக்கு தெரிந்திருந்தது. எனவே எனது பிரச்சனைகளில் மூன்றை அவர் தீர்த்து வைத்தார்.

டேய்! உனக்கு ஒரு டொயோடா கொராலா 1983ம் ஆண்டு மொடல் தான் சரி என்றார். அது நிற்காமல் ஓடும் என்றார். நான் ”நிற்காமலா” என்ற போது டேய் பழுதாகாமல் ஓடும் என்று சொல்ல வந்தேன் என்றார்.

எனக்கு காரில் ஏறவும் இறங்கவும் மட்டுமே தெரிந்திருந்த காலமது. சிவா எதைச் சொன்னாலும் தலையாட்டினேன். உள்ளூர்ப் பத்தி‌ரிகையில் தேடத் தொடங்கினோம்.  கார்கள் இருந்தளவுக்கு எனது கஜானாவில் பணம் இருக்கவில்லை. நான் அமைதியாய் இருந்தாலும் சிவா அமைதியாய் இருக்கவில்லை. ஓரிரு வாரங்களில் ஒரு கார் இருக்கிறது  என்று என்னை அழைத்துப் போனான்.

அங்கு இருந்தது காரா அல்லது உக்கிப் போன இரும்பா என்று எனக்கு பெரும் சந்தேகம் வர மெதுவாய் சிவாவைக் கேட்டேன். அவனுக்கும் அந்த சந்தேகம் வந்திருக்க வேண்டும் என்னைப் பார்த்து வாயைப் பிதுக்கினான். வெறுங்கையோடு திரும்பினோம்.

அடுத்து வந்த ஒரிரு நாட்களில் மீண்டும் அழைத்தான். இப்போது ஒரு டொயோடா கோரோலா 1983ம் ஆண்டுக் கார். சிவா சொன்ன அதே நிற்காமல் ஓடும் கார். மஞ்சல் நிறமானது.

உரிமையாளருடன் ஏதோ பேசினான். அவர் திறப்பைக் கொடுத்தார். முதலில் காரை மூன்று முறை சுற்றி வந்தான். டயருக்கு உதைத்துப் பார்த்தான். எதையோ அமத்திப் பார்த்தான் அவனின் முகம் திருப்பதியாய் இருந்தது. பின்பு காரின் முன்பகுதியை திறந்து அதன் மேல் படுத்துக்கிடந்து எதையே பார்த்த பின்பு என்னையும் ஏற்றிக் கொண்டு காரை ஓடிப் பார்க்க புறப்பட்டான்.

ஒடி முடித்து, விலைபேசி, எனது பெயரில் காரை பதிவு செய்து காப்புறுதியும் செய்ய சில நாட்களாயின.

அதன்பின்னான சில வருடங்களின் பின், ஒரு குளிர்காலத்தில், ரேடியேட்டர் தண்ணி உறைந்து வெடித்து அந்தக் கார் செத்துப்போகும் என்று எனக்கு அன்று தெரிந்திருக்கவில்லை.

சிவா கார் பழக்கத் தொடங்கும் நாளும் வந்தது. ஒரு குளத்தின் பின்னால் உள்ள வழியில் நிறுத்தி என்னை சாரதி இருக்கையில் இருத்தினான்.

”டேய்..  இது கிளட்ச்”
”அது பிறேக்”
சைக்கில் ஞாபகத்தில் நான் முன் பிறேக்ஆ, பின் பிறேக்ஆ என்ற போது ”இதென்ன உன்ட கொப்பரின்ட சைக்கிலே.. டேய் இது கார்” என்றான்
”அது அக்சிலேட்டர்”
”இது கியர்”
இப்ப‌டிப் போனது முதல் நிமிடங்கள்

இப்ப கிளட்ச்ல இருந்த காலை எடுத்து அக்சிலேட்டர அமத்து என்றான்
காலை எடுத்தேன்
கார் லோங்ஜம்ப் பாய்வது மாதிரி பாய்ந்து நின்றது.

அய்யோ.. என்ற படி தலையில் அடித்துக் கொண்டான்
மெதுவாய் நுணுக்கங்கள் பிடிபட கார் ஓடத் தொடங்கியது.
தூரத்தில் எதிரே ஒரு கார் வர பயத்தில் என்னடா செய்யுறது என்றேன். ரோடு என்றால் வாகனம் வரத்தான் செய்யும், அதற்கேற்ற மாதிரி ஓட வேணும் என்று சொல்லி ஸ்டியரிங்ஐ பிடித்து திருப்பி அந்தக் காருக்கு வழிவிட்டான்.

இப்படி சிவாவும், குமார் என்று இன்னொரு நண்பரும் எனக்கு கார் ஓட்டப் பழக்கினார்கள். நானும் தியரி எல்லாம் படித்து ஆசிரியருடன் ஓடவேண்டிய நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தேன்.

அந்த ஆசிரியரைப் பற்றி ஊருக்குள் ஒரு வித கதை இருந்தது. பெண்கள் என்றால் வடிவாக சொல்லிக் கொடுப்பாராம், அதோடு தேவைக்கு அதிகமாகவே கதைப்பாராம் என்று.  எனக்கு அவர் என்னோடு கதைக்காவிட்டாலும் பறவாயில்லை ஆனால் தன்னிடம் இவன் கார் ஓடப் பழகினான் என்று சேர்டிபிகேட்  தந்தா காணும் என்னும் நிலையில் நான் இருந்தேன். அவரும் சில ஆயிரம் குறோணர்களை பிடுங்கிக்கொண்டு எனக்குப் பழக்கத் தொடங்கினார்.

எங்களுக்கு முதல் நாளே பிரச்சனை வந்தது. அவர் நான் எப்படி ஸ்டியறிங்கை பிடித்து திருப்ப வேணும் என்று  சொன்னவிதம்கற்பித்த முறை சிவா கற்பித்த முறையில்இருந்து மாறுபட்டிருந்தது. கையுக்கும் ஸ்டியரிங்க்கும் இடையில் 90 பாகையில் கோணம் இருக்க வேண்டும் என்றார். சிவா சீட்டை நன்கு பின்னுக்கு தள்ளி கையை ஸ்டியரிங்க்கு மேலே வைத்து ஓடுவதை நான் பார்த்ததால் நான் அப்படியே ஓடினேன். கையுக்கும் ஸ்டியரிங்க்கும் இடையில் 150 பாகையில் கோணம் இருந்தது. ஆசிரியருக்கு, அவரை விட நான் 60 பாகை அதிகமாக வைத்தது பிடிக்கவில்லை. சீட்டை பின்னுக்குத் தள்ளிய போது.. என்ன நீ படுக்கப் போகிறாயா என்றார் நக்கலாய். அடுத்தநாள் ரெண்டுபே‌ரும் பேரம் பேசி 120 பாகையில் நான் ஸ்டியரிங் பிடிக்கலாம் என்று சாமாதான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.

அன்றே இன்னொரு பிரச்சனை வந்தது. ஆசிரியர் வலது பக்கம் திரும்பு என்றால் நான் இடது பக்கமும், இடது பக்கம் திரும்பு என்றால் நான் வலது பக்கமும் திரும்பியபோது மனிதருக்கு கடும் கடுப்பு வந்து, வாகனத்தை நிறுத்து என்றார்.

 நானும் நிறுத்தி அவருக்கு எனது பெரிய பிரச்சனையை இப்படி விளக்கினேன். ஆசிரியரே எனக்கு தமிழிலேயே இந்த பாழாய்ப்போன வலது, இடது பெரிய பிரச்சனையாயிருக்கிறது,  நீங்களோ ‌நோர்வேஐிய மொழியில் சொல்கிறீர்கள் எனவே எனக்கு இருமடங்கு தடுமாற்றமாய் இருக்கிறது என்றேன். அன்றிலிருந்து ஆசிரியர் வலதுக்கு இடம் என்று சொல்லியும் இடதுக்கு வலது என்று சொல்லியும் என்னை சிறப்பாகக் கார் ஓட்டப் பழக்கினார்.

இறுதியாக தியரிப் பரீட்சை நடந்தது. பாஸ்பண்ணினேன். அடுத்த நாள் நான் ‌அரசஅதிகாரி ஒருவருக்கு  கார் ஓடிக் காட்ட வேண்டும். கா‌லையிலேயே வீட்டில் பெரிய பூசை எல்லாம் நடந்தது. ஊருக்கு போன் பண்ணி நேர்த்தியும் வைத்தார்கள். நானோ எனது வலது, இடது பிரச்சனையை எப்படி சமாளிப்பது முழுசிக் கொண்டிருந்தேன்.

அதிகாரி வந்தார். காரில் ஏறி இருந்தோம். பரீட்சைமுறையை விளக்கினார். கார் நேரே ஓடத் தொடங்கியதும் எனக்கு ஞானம் பிறப்பது போல ஒரு ஐடியா உதயமாகியது காரை நிறுத்தினேன். என்ன நான் சொல்லாமலே நிறுத்துகிறாய் என்றார் அதிகாரி.

ஐயா! நான் நோர்வேஐியன் இல்லை என்பது உங்களுக்குத் தொரியும் என்றேன். ஆமாம் உனது நிறமே ஒரு மாதிரித்தான் இருக்கிறது என்பது போல தைலையாட்டினார். எனக்கு இந்த வலது இடது என்பது தெரியாது. எனவே கையால காட்டுறீங்கள் நான் ஓடுகிறேன் என்றேன்

மெதுவாய் சிரித்து, முதுகில் தட்டி கையை இடது பக்கம் காட்டினார். கார் அவர் சொன்ன பக்கம் திரும்பி ஓடிக் கொண்டிருந்தது.

பி.கு:

அன்று லைசன்ஸ் எடுத்து வீட்ட வந்த போது தான் வைத்த நேர்த்தி தான் நான் பாஸ் பண்ண காரணம் என்றார் ஒருவர். அவருக்கு தெரியுமா நான்  பாஸ் பண்ண ஆசிரியரின் கை தான் காரணம் என்று.

இது பற்றி உரையாடி மகிழ நண்பன் சவா உயிரடன் இல்லை என்பது மனதை ஏனோ நெருடுகிறது.

4 comments:

  1. // அது நிற்காமல் ஓடும் என்றார். நான் நிற்காமலா என்ற போது டேய் பழுதாகாமல் ஓடும் என்று சொல்ல வந்தேன் என்றார். //

    என்னா நக்கலடிக்கிறாங்க...

    ReplyDelete
  2. வாழ்வின் சாதாரண பக்கங்களுக்கு
    சுவை கொடுக்கும் உங்கள் எழுத்து
    சுவையாக இருக்கிறது

    ReplyDelete
  3. டாக்டர் ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு சரி. மீண்டும் மீண்டும் வாசிக்கதொன்றும் ஒரு காந்த சக்தி உங்கள் எழுத்துக்கு உண்டு சஞ்சயன். தொடர்ந்து பெரிய அளவில்(பெரிய பெரிய எழுத்தாக இல்லை, நான் சொன்னது பெரிய மொத்தமான நாவல்கள் போல ) எழுதுங்கள். வாழ்க் நீங்கள். வளர்க உங்கள் எழுத்துக்கள்.

    ReplyDelete
  4. உங்களின் அன்பான பாராட்டுதல்களுக்கு மனம் நெகிழ்நத நன்றிகள்.

    Yarl,வாழ்க, வளர்க என்பதெல்லாம் அரசியல்வாதிகளுடைய சொற்கள் அல்லவா? நீங்கள் என்னை இலங்கையின் ஜனாதிபதியாக அமர்த்துவதற்கு போசிக்கிறீர்களோ என யோசிக்கிறேன்..

    ReplyDelete

பின்னூட்டங்கள்