நோபல் பரிசும் எனது உரிமைப்போரும்

இன்று காலை விடியும் போதே நல்லதாய் விடியவில்லை. ஒருவர் தந்த கணணியை திருத்தி வேறொருவருக்கு கொடுத்திருக்கிறேன் எனது பிரபல்யமான மறதியால். கணணியைத் தந்தவர் வந்து கணணியைத் தா என்ற போது அரின் கணணியாக்கும் என்று நான் நினைத்த கணணியை தூக்கிக் கொண்டு போனேன். மனிதர் அது தனது கணணி இல்லை என்றதும் இன்னொன்றைக் காட்டினேன். இப்படி 4 கணணி காட்டியபின்பு அவருக்கு சற்று எரிச்சல் வந்தது. எனக்கு என்மேலேயே எரிச்சலாய் இருந்தது. உனக்கு வேறு கணணி தருகிறேன் என்று சமாதானம் செய்து அனுப்பினேன் அவரை. மொட்டையன், கறுப்பன், சனியன் என்று திட்டிக்கொண்டு போயிருப்பார் என்று தான் நினைக்கிறேன். அதுக்காக நான்  மறதியை மறந்ததாக நீங்கள் நினைக்கப்படாது ..ஆமா.

அதன் பின் ஒருவர் கணணி திருத்த அழைத்தார். அவரிடம் போவதற்காக நிலக்கீழ் ரயில் நிலயம் போனேன். கண் முன்னேயே ரயில் போனது. அடுத்த ரயிலுக்கு 15 நிமிடங்கள் கடும் குளிரில் காத்திருந்தேன். அந்த ரயில் வருவதற்கு 3 நிமிடத்து முன் ஏதோட்சையாக எனது டிக்கட் இருக்கிறாதா என காட்சட்டைப் பையினுள் பார்த்தேன். அது நான் எடுத்து வைத்திருந்தால் தானே அது அங்கிருக்கும். அதை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருந்தது புரிய, அதையெடுத்து வந்து மீண்டும் குளிரில் நின்று ரயில் பிடித்து அழைத்தவரின் வீட்டுக்குப் போனேன். அவரின் கணணியை திருத்தும் போது எனது ”தொல்லை” பேசி அழைத்தது. இன்றைய காலைப் பொழுதைப் போல அந்த தொலைபேசி அழைப்பும் சந்தோசத்தை தரவில்லை. மாறாக எரிச்சலை கிளப்பிவிட்டது.

கணணியை திருத்தும் போது தான் இன்று மாலை நோபல் பரிசு பெற்றவரை பாராட்டி நடைபெறும் இசைநிகழ்ச்சிக்கு டிக்கட் எடுத்திருக்கிறேன் என கைத்தொலைபேசி ஞாபகமூட்டியது. கணணியை திருத்திக் கொடுத்து இசைநிகழ்சிக்கு போகும் வழியில் ஒரு சோடாவும், பணிஸ் ஒன்றும் வாங்கி வைத்துக் கொண்டேன்.

ஒல்லோவின் மிகப் பெரிய Spektrum அரங்கில் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள். மெதுவாய் அரங்கை நெருங்கினேன். கூட்டம் அலைமோதியது.  எனது உள்புகு வழி இலக்த்தை தேடியலைந்த போது எனக்கு முன்னால் நின்றிருந்த பெண் திடீர் என பனியில் சறுக்கி நிலத்தை முத்தமிட்டார். அவரின் கணவரால் அவரைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.  நானும் அவருமாய் விழுந்தவரை தூக்கி நிறுத்தினோம். நன்றி என்றார் என்னைப் பார்த்து. அவரின் வாயில் இருந்து வந்த மதுபான நெடியில் எனக்கு தலை சுற்றியது போலிருந்தது. அவர் விழுந்ததன் காரணம் புரிந்தது.

வரிசையில் நின்று உள்ளே புகுகிறேன் ஒரு வெள்ளையின பெண் பாதுகாப்பதிகாரி கதவருகில் நின்று எல்லோரையும் கவனித்துக் கொண்டிருந்தார். நான் அவரைக் கடந்ததும் திடீர் ஓடிவந்து என்னைப் பிடித்துக் கொண்டார்.  என்ன பிரச்சனை என்றேன்? உனது தோளில் இருக்கும் பையை சோதிக்க வேண்டும் என்றார். ஏற்கனவே இன்றைய பொழுதின் அடாவடித்தனங்களினால் எரிச்சலில் இருந்த எனக்கு இவர் என்னை மட்டும் நிறுத்துவது மிகுந்த எரிச்சலை  தரத்தொடங்கியிருந்தது.

எனது பையினுள் இருந்த சோடாவையும், பணிஸ்சையும்  உள்ளே கொண்டு போக விடமாட்டார் என்றார். என்னிடமிருந்த கொஞ்ச நஞ்ச நிதானமும் காற்றில் பறக்க, ”ஏன் அதற்குள் குண்டு இருக்கிறதா?” என்றேன் மிகவும் சூடாக.  அதற்கு அவர் உணவும், குடி வகைகளும் உள்ளேதான் வாங்க வேண்டும் என்றார். எனக்கு கோவம் கண்ணையும் புத்தியையும் மறைக்கத் தொடங்க அவருடன் பெருஞ் சத்தத்தில் வாதாட, அவருக்கு உதவியாய் அவரின் சகாக்கள் வந்தனர்.

உங்கள் சட்டத்தைப் பற்றி நுகர்வாளன் எனக்கு நீங்கள் அறிவிக்காமல் எவ்வாறு நீங்கள் சட்டத்தை அமுல் படுத்தலாம் என்பது எனது வாதமாயிருந்தது. அவரோ எனக்கிடப்பட்ட கட்டளையை நான் நிறைவேற்றுகிறேன் என்றார். உனக்கு கட்டளையிட்டவனை அழைத்துவா என்று கத்தினேன் பெருஞ்சத்தத்தில். கடந்து போனவர்கள் என்னை தற்கொலைகுண்டுதாரியாக நினைத்திருப்பார்களோ என்னவோ அடிக்கடி திரும்பி திரும்பி பார்த்தபடியே கடந்து போனார்கள்.

இறுதியில் மேலதிகாரியை அழைத்தார்கள். அவரும் வந்தார். எனது நியாயத்தை கேட்டேன். நீங்கள் சோடாவையும் பணிஸ்ஐயும் கொண்டு போங்கள் என்றார் பெரு மரியாதையுடன். அந்தப் பெண்ணை ஏதோ ஒரு அற்பப் பிரணியைப் பார்ப்பது போல  நக்கலாய் பார்த்தபடியே நகர இன்னொருவர் (வெள்ளைக்காரன்) என்னைப் போல் ஒரு பையை காவிக்கொண்டு உள்ளே போனார். அவள் அவரை நிறுத்தாதது எனது எரிச்சலை மீண்டும் கிளப்பியது.

நான் மீண்டும் அந்த பெண்ணிடம் போய் நீ என்ன நிறக்குறுடா? எனக் கேட்டேன். அவளுக்கு புரிய வில்லை. என்ன என்றாள்?. நீ நான் கறுப்பன் என்பதால் தானே என்னை நிறுத்தினாய். ஆனால் வெள்ளை இனத்தவரை பரிசீலிக்காமல் அனுப்புகிறாய் என்று கத்த அருகில் இருந்த மேலதிகாரி நாம் நிற பேதம் பார்ப்பதில்லை என்று சொல்ல... நான் அப்ப ஏன் அவரை சோதிக்கவில்லை என்று கேட்க.....அந்த  மேலதிகாரி அப் பெண்ணுக்கு ”டோஸ்” விட அப் பெண் ஓடிப் போய் அந்த வெள்ளைக்காரனையும் அழைத்து வந்தாள். மீண்டும் நக்கலாய் சிரித்து எனது கூரூரத்தை அவளுக்கு காட்டினேன். அதன் பின் பையுடன் வந்த எல்லோரையும் அவள் பாய்ந்து பாய்ந்து நிறுத்திக் கொண்டிருந்தாள்.

எனக்குள் இருந்த சீற்றம் அடங்க அதிக நேரமெடுத்தது. இன்னும் அதிகமாக அந்தப் பெண்ணை திட்டியிருக்க வேண்டுமென்றது மனம்.

கடந்த இரண்டு நாட்களாக என்னத்தை எடுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இன்றைய நாள் மிகவும் மனக்கிலேசத்தை தந்திருந்தாலும் எழுதுவதற்கு ஒரு கதையைத் தந்ததினால் இன்றைய நாளும் நல்லதே...


.

2 comments:

  1. இந்த நிகழ்வுக்கு பின் நிகழ்ச்சியை முழுமையாக ரசித்து பார்த்திருக்க மாட்டீர்கள் இல்லையா சஞ்சயன்? நியாயத்தை தட்டிக்கேட்ட உங்களுக்கு ஒரு சபாஷ்!!!!

    ReplyDelete
  2. உங்கள் ஒரு கண் போனால் அடுத்தவன் இரு கண்ணை எடுக்காது விட மாட்டீர்களோ?

    ReplyDelete

பின்னூட்டங்கள்