விளையும் பனியில் அலையும் வாழ்வு

இன்று காலை சற்று நேரம் என்னையும் மீறி தூங்கிந்தேன். அவசர அவசரமாக  வெளியில் இறங்கும் போது  இரவு பனி விளைந்திருப்பது தெரிந்தது. நேற்றைய வானிலையறிக்கையில் இன்னும்  2 நாட்களுக்குள் 40 - 50 செ.மீ பனி கொட்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது.

நிலக்கீழ் தொடரூந்தில் நின்றே பயணிக்க முடிந்தது. பலரும் தங்கள் தங்கள் அலைபேசிகளை நோண்டிக்கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்கு நோண்டிப் பார்த்தேன். தொடரூந்தில் இருந்து இறங்கி வேலைக்கு நடக்கலானேன். அவசத்தில் காலையுணவை உண்ணமால் வந்திருந்ததால் ஒரு கடைக்குள் புகுந்து ஒரு ”பண்” வாங்கிக் கொண்டு வேலைக்குள் புகுந்து கொண்டேன்.

சுடு தண்ணி எடுத்து அதனுள் கோப்பி கலந்து அதன் வாசனையை நுகர்ந்த படியே ”பண்” சாப்பிட்டேன். இணையத்தில் சிறியதொரு உலா வந்தேன். ஆற்றைக் கடக்க முற்பட்ட ஒரு நரியின் கால்கள் எதிர்பாராத விதமாக குளிர் நீர் ஐஸ்கட்டியாக மாறிய போது விறைத்துப் போனதால் அது நடமாடமுடியாமல் அவ்விடத்திலேயே நின்றிருப்பதை படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். நரியும் படத்தில் பல்லைக் காட்டியபடியே போஸ்  கொடுத்தக் கொண்டிருந்தது. மனித நரிகளைப் போல் இந்த நரியும் பிழைக்கத் தெரிந்த நரி போல என நினைத்துக் கொண்டேன்.

பின்பு வேலையில் கவனத்தை செலுத்த முயன்ற போது கண்கள் இருண்டன, தலை சுற்றியது, வயிற்றைப் பிசைந்துது, வியர்த்து மிகுந்த அசௌகரீயம் உணர்ந்தேன். இந்நிலை தொடந்து இரு மணிநேரமாக தொடர்ந்ததால் மேலதிகாரிக்கு மின்னஞ்சலில் ”சுகயீனம், வீடு போகிறேன்” என்று எழுதிவிட்டு வீடு நோக்கி புறப்பட்டேன். வெளியில் பனி தன்பாட்டிற்கு கொட்டிக் கொண்டிருந்தது. ஏறக்குறைய முழங்கால் வர மறைக்கும் ஜக்கட்ஐயும், நெற்றியையும், காதுகளையும் மூடும் தொப்பியையும் போட்டுக் கொண்டேன். மப்ளரை எடுத்து கழுத்தில் இருந்து மூக்கு வரை சுற்றிக் கட்டிக் கொண்டேன். எனது கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தன. ஏறக்குறைய ஒரு முகமுடிக் கொள்ளைக்காரனைப் போலிருந்தேன் நான்.

ஒஸ்லோ மாநகரின் முக்கிய வீதியினூடாக மெதுவாய் நடந்து போய்க் கொண்டிருந்தேன். சிந்தனை எனது சோர்விற்கான காரணத்தை துப்பறிந்து கொண்டிருந்தது. திடீர் என ”நீங்க தமிழா” என்று ஒரு குரல் கேட்ட சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தேன். கண் முன்னே இரண்டு பயணப்பொதிகளுடன் ஒருவர் நின்றிருந்தார்.  என்னை அவர் தமிழர் என்று எப்படி அறிந்து கொண்டார் என ஆச்சர்யமாக இருந்தது. எனது கண்களைப் பார்த்து மதிப்பிட்டாரா அல்லது முகமுடி கொள்ளைக்காரன் போலிருந்ததால் நிட்சயமாய் இவன் தமிழன் தான் என்று முடிவு செய்தாரா எனப் புரியவில்லை.

ஆம் தம்பி, நான் சுத்தத் தமிழனே தான் என்ற படி அவரை அவதானித்தேன். 30 க்கு உட்பட்ட வயது, களைத்த முகம், மிரட்ச்சியான கண்கள், பனிக்காலத்திற்கு ஒவ்வாத சப்பாத்துக்கள் என நின்றிருந்தார்.

அண்ணண் இங்கு ஒரு போலீஸ் ஸ்டேசன் இருக்கிறதாமே, அதற்கு வழி சொல்லுங்கள் என்றார்.  ஏன் ஏதும் பிரச்சனையா? என்ற போது தான் இந்தியாவில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும், தனது ஏஜன்ட் தன்னை இவ்விடத்திற்கு போய் அகதி அந்தஸ்து கோரும்படி சொன்னதாகவும் சொன்னார்.

எனக்குத் தெரிந்து அவ்விடத்தில் போலீஸ் நிலயம் இல்லை. அருகில் ஒரு நண்பர் ஒருவர் தொழில் புரிவதால் அவருக்கு அலைபேசி எடுத்து உடனே வருமாறு கேட்ட போது தயங்காமல் உடனேயே வந்தார். அவருக்கு அந்த போலீஸ் நிலையம் தெரிந்திருந்தது. நண்பருக்கு நன்றி சொல்லிப் புறப்பட்ட போபோது தம்பி சாப்பிட்டீர்களா என்று கேட்டேன். இல்லை என்று தலையாட்டினார். சரி வாருங்கள் சாப்பிடுவோம் என்று சொல்லி தெரிந்த தமிழ் உணவகத்திற்கு அழைத்துப் போனேன்.

என்ன சாப்பிடுகீறர்கள் என்றேன். மௌனமாய் நின்றிருந்தார். கடையில் கொத்துரொட்டி (கொத்து பரோட்டா) இருந்தது. அதனுடன் ஒரு டீயும் சாப்பிட்டார்.  முகத்தில் சிறிது தெம்பு தெரிந்தது.

தம்பி எந்த ஊர் என்று கேட்டேன்.  மெளனமாய் நின்றிருந்தார். இந்தியாவா என்றேன். ஆம் என்றார். அப்ப சென்னையா என்றேன் (நமக்கு தெரிந்தது அது மட்டும் தானே) இல்லண்ணே நானு நாகபட்டினம் என்றார்.

எங்களுக்குள் இருந்த இறுக்கமும் இடைவெளியும் குறைந்து சரளமாக உரையாடிக் கொணடிருந்தோம்.

வீசா கொடுப்பாங்களா என்றார். இல்லை என்று தான் அறிகிறேன் என்று தெரிந்தததை சொன்னேன். தான் 5 லட்சம் இந்திய ரூபாய் கொடுத்து வந்ததாகச் சொன்னார். அந்தக் காசில் அங்கு ஏதும் தொழில் செய்திருக்கலாமே என்று எனது மனதில் தோன்றியதைச் சொன்ன போது ஆமா அண்ணே, முட்டாள் வேலை பார்த்திருக்கிறேனோ என யோசிப்பதாகச் சொன்னார்.  ஆயினும் தனக்கு ஊரில் பல பிரச்சனைகள் இருப்பதால் இங்கு வாழ முடியாதிருப்பதாகவும் அதனாலேயே புறப்பட்டதாகவும் சொன்னார்.

பின்பு அவரே  தொடர்ந்தார். ஊரில் நடந்ததொரு கொலைக்கு சுற்றவாளியான தன்னை குற்றவாளியாக்கியுள்ளார்கள் என்றும் அதனால் தான் இரண்டு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்ததாகவும், ஊராரும் அதையே நம்புவதாலும், போலீஸ் கெடுபிடிகள் அதிகம் என்பதாலும் தப்பி வந்ததாகச் சொன்னார்:

அவரின் கதை  உண்மையா பொய்யா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையாக இருந்தால் என நினைத்து அவருக்காக நான் பரிதாபப்பட்டேன். வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று ஒரு பழைய தத்துவத்தையும் எடுத்துப் போட்டேன். ஆம் என்பது போல தலையாட்டினார். சற்று நேரம் இருவரும் மெளனத்துடன் பேசிக்கொண்டிருந்தொம்.

சிம் கார்ட் வேணும் அண்ணே என்றார். அருகில் நண்பரின் கடை இருந்ததால் அங்கு அழைத்துப்போனேன். நோர்வே அடையாள அட்டை இன்றி ”சிம்” எடுக்க முடியாது என்றார் அவர். உங்களுக்கு ஏதும் உதவி தேவையின் இந்தக் கடைக்கு வந்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றேன். தலையாட்டினார்.

போலீஸ் நிலயம் வரை அவரை அழைத்து வந்தேன். வரும் வழியில் மெளனமாக பின்னாலேயே நடந்து வந்தார்.  கையில் பணம் ஏதும் இருக்கிறதா என்ற போது மெளனமாய் நின்றிருந்தார். சிறிது பணம் கொடுத்த போது மறுத்தார். வற்புருத்தித் திணித்தேன். கண்களால் நன்றி சொன்னார்.

போலீஸ் நிலயத்திற்குள் நான் காட்டிய கதவைத் திறந்து உள்ளே போவதைக்

கண்டேன். என் மனம் 23 வருடங்களுக்கு முன்னான நினைவுகளுக்குள் முழ்கிப்போயிருந்தது. நானும் இன்று போல பனி கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு தைமாதம் 7ம் திகதி  இப்படி ஒரு கதவைத் தள்ளிக் கொண்டு தான் போலீசுக்குள் புகுந்தேன்.  இன்று தை 5ம் திகதி. அந்தத் தம்பியும் ஒரு கதவைத் தள்ளிக் கொண்டுநோர்வேக்குள் புகுந்திருக்கிறார்.

எனக்கு இங்கு என்று விதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எப்படி விதிக்கப்படுமோ?

இன்றைய நாள் முழுவதும் மனம் அவரையே சுற்றி சுற்றி வந்தது.


இன்றைய நாளும் நல்லதே


.

4 comments:

  1. மனம் கனக்கிறது. அந்த தம்பிக்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும். உங்கள் உடம்புக்கு என்ன? ஓய்வு எடுங்கள். பயண அலைச்சலாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. இது மாதிரி எத்தனைப் பேர்!

    ReplyDelete
  3. நல்லது விதிக்கப்பட்டிருக்கும் என நம்புவோம்.

    ReplyDelete
  4. கதையில் மூழ்கியதால் உங்கள் நலக்குறைவு பற்றிக் கேட்க மறந்துவிட்டேன். மறைந்திருக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்